திருப்பூர், பிப். 8: திருப்பூரில் திருமண மண்டபம், கல்லூரிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக கொரோனா மருத்துவமனையை வருவாய்துறையினர் அகற்றி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தாலுகா தோறும், தலா 150 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையை திருமண மண்டபங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டன. கடந்த இரு மாதங்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், தற்போது நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.
அதேவேளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு வகுப்புகள் துவங்கி உள்ளதால், சில பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனை கட்டமைப்புகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் இன்று (8ம் தேதி) முதல் பள்ளி 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகள், கல்லூரிகள் முழுமையாக திறக்கப்பட உள்ளதால், திருப்பூரில் திருமண மண்டபம் மற்றும் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக மருத்துவமனை கட்டமைப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் வேலாயுதசாமி திருமண மண்டபம், சரவணன் திருமண மண்டபம், நிஃப்டி கல்லூரி, ஏஞ்சல் பொறியியல் கல்லூரி, குமரன் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த 9 தற்காலிக மருத்துவமனை கட்டமைப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.