×

அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த மருத்துவமனை துவங்கக்கோரி வழக்கு: அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவு

மதுரை: அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த மருத்துவமனைகள் துவங்கக் கோரிய வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஜெயவெங்கடேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சிக்குன் குனியா, டெங்கு, கோவிட் போன்ற இக்கட்டான நோய் தாக்குதலின் போது பாரம்பரிய சித்த மருத்துவ முறை மக்களிடையே முக்கிய பங்காற்றியது. ஆனால் தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் சென்னை, மதுரை, கோவை உள்பட 7 மாநகராட்சிகளில் மட்டுமே அரசு சித்த மருத்துவமனைகள் உள்ளன. சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோவில், சிவகாசி உள்பட 14 மாநகராட்சிகளில் அரசு சித்த மருத்துவமனைகள் இல்லை. சேலத்தில் ஏற்கனவே இருந்த 2 சித்த மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும்.

பாரம்பரியமிக்க சித்த மருத்துவமனைகள் ஏற்படுத்தினால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பயனடைவர். எனவே, இந்திய மருத்துவ முறையை ஒன்றிய, மாநில அரசுகள் ஊக்குவித்து வரும் நிலையில் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகளிலும், மாவட்டங்களிலும் அரசு சித்த மருத்துவமனைகள் துவங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் மனுவிற்கு ஒன்றிய இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.

The post அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த மருத்துவமனை துவங்கக்கோரி வழக்கு: அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Siddha Hospitals ,Madurai ,Court of Appeal ,Siddha ,Jayavenkatesh ,ICourt ,
× RELATED பழைய அரசாணைப்படி ரேக்ளா ரேஸ்: ஐகோர்ட் அனுமதி