பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரசார கூட்டம் மார்ச் 1ம் தேதி மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடக்கிறது. இதற்கான இடம் தேர்வு மற்றும் கால்கோள் விழா சமீபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கான முன்னேற்பாடு, திடல் பணிகளை மேற்கொள்வதற்காக மாநில தலைமையிடம் இருந்து இதுவரை பணம் வந்து சேரவில்லையாம்.
கையில் இருந்து பணத்தை செலவிட வேண்டிய நிலையில் மதுரை மாவட்ட பாஜவினர் பெரும் தயக்கத்தில் உள்ளனர். இதனால், பிரசார கூட்ட முன்னேற்பாட்டு பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாநில தலைமையிடம் இருந்து பணம் வராத நிலையில், முக்கிய நிர்வாகிகளும் செலவிட முன்வராமல் ஒதுங்கியே இருக்கின்றனர். ஒரு சிலரைத் தவிர மற்ற நிர்வாகிகள் யாரும் இந்த பிரசார பொதுக்கூட்டம் நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று கட்சி நிர்வாகிகளே புலம்புகின்றனர்.
இந்த பிரசாரக் கூட்டம் தொடர்பாக இதுவரை பொறுப்பாளர்கள் நியமனம் இல்லாததும், நிர்வாகிகளிடையே போதுமான ஒத்துழைப்பு இல்லாததும் பாஜவில் பெரும் தொய்வு ஏற்பட்டதையே காட்டுகிறது. இதற்கிடையே, இதையே சாக்காக வைத்து, இந்த கூட்ட ஏற்பாட்டு பொறுப்பை நமது தலையில் கட்டி விடுவார்களோ என்ற அச்சத்தில் மதுரை மாவட்ட இலைக்கட்சி நிர்வாகிகள் கொஞ்சம் ஒதுங்கியே நிற்கிறார்களாம்.
