அணைக்கட்டு, பிப்.18: வேலூர் மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் மயான கொள்ளை விழா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று அணைக்கட்டு, சின்ன தெள்ளூர், பென்னாத்தூர் பகுதியில் மயான கொள்ளை விழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நேற்று பக்தர்கள் படை சூழ அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளம்மன் மயானத்திற்கு புறப்பட்டார். அலங்கார தேரில் அம்மன் மயானத்திற்கு வந்ததும் அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மயான சூரையாடல் நடைபெற்று மயான கொள்ளை விழா கோலாகலமாக நடைபெற்றது.
விழாவில் அம்மன் வேடம், காளி வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் நடனமாடியபடி வந்தும், உடம்பில் எலுமிச்சம்பழம் குத்திக்கொண்டும் ஊர்வலமாக நடனமாடியபடி வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். இறந்தவர்களின் சமாதியில் பொறி, சுண்டல், இனிப்பு கார வகைகளை படையலிட்டு வழிபட்டனர். அணைக்கட்டில் நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் அணைக்கட்டு மத்திய ஒன்றிய திமுக செயலாளர் வெங்கடேசன் உட்பட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி அணைக்கட்டு, அரியூர் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
