×

காட்டுமன்னார்கோவில் அருகே பைக் விபத்தில் அண்ணன், தம்பி பலி

காட்டுமன்னார்கோவில், பிப். 4: இருசக்கர வாகன விபத்தில் அண்ணன், தம்பி பலியானார்கள். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த கண்டமங்கலம் சீப்புலித்தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி. இவருக்கு 4 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். அதில் 2வது மகன் அழகுராஜா (28) வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீடு திரும்பி  உள்ளார். இவரின் இளைய சகோதரர் விஜய் (20), அழகுராஜாவும், விஜயும், செட்டித்தாங்கல் ராஜேந்திரன் மகன் ராஜதுரை (20) என்பவருடன் கண்டமங்கலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னார்கோவில் சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளனர்.

அப்போது பூவிழுந்தநல்லூர் அருகே ரங்கநாதபுரம் வளைவை கடக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் வடவாற்றின் கரையில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து எதிரில் இருந்த பனைமரத்தில் மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த அழகுராஜா மூச்சுபேச்சின்றி ரத்தவெள்ளத்தில் மயங்கினார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சுக்கும், காட்டுமன்னார்கோவில் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் மூவரையும் சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு தூக்கி வரப்பட்ட வாலிபர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அழகுராஜா, விஜய் ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கை,கால், தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்த ராஜதுரையை சிதம்பம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகன விபத்தில் அண்ணன், தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Brother ,bike accident ,Kattumannarko ,
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...