×

திமிரி அருகே விஏஓ அலுவலகத்தில் அமர்ந்து போலி மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி லட்சக்கணக்கில் மோசடி

*பெண் உட்பட 2 பேர் கைது

கலவை : ஒன்றிய அரசின் மருத்துவ காப்பீடான ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை குடும்பத்தினர், ஒரு ஆண்டுக்கு கட்டணம் இன்றி மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டத்தை கடந்த 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, அந்த காப்பீடு அட்டையை பெறுவதற்கு தகுதியான பயனாளிகள் அதற்குரிய இணையதளத்தில் சென்று, ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டின் விவரங்களை பதிவு செய்து மருத்துவ காப்பீடு அட்டை பெற்று கொள்ளலாம்.

இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஒன்றியத்தில் உள்ள கணியனூர், தாமரைப்பாக்கம், மழையூர் உள்ளிட்ட பல ஊராட்சிகளில் கடந்த 5 நாட்களாக 5 பேர் கொண்ட குழுவினர், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ அட்டை வழங்குவதாக கூறி பணம் வசூலித்துள்ளனர்.

மேலும், திமிரி அடுத்த கணியனூர் கிராமத்தில் கடந்த 3 நாட்களாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், ஒன்றிய அரசின் மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதாக கூறி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடத்தில் தலா ரூ.100 வீதம், லட்சக்கணக்கில் வசூலித்து மருத்துவ காப்பீடு அட்டையை வழங்கியுள்ளனர்.அவ்வாறு வழங்கிய மருத்துவ காப்பீடு அட்டையில் உள்ள க்யூஆர் கோடை நேற்று பொதுமக்கள் ஸ்கேன் செய்தனர். அதில் ஒன்றிய அரசின் மருத்துவ காப்பீடு அட்டை இல்லை என்பது தெரியவந்தது.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள், நேற்று மருத்துவ காப்பீடு அட்டை வழங்கிய ஒரு பெண் மற்றும் வாலிபரை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பூட்டி வைத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திமிரி சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார், இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த அஜீத், திமிரி அடுத்த நம்பரை கிராமத்தை சேர்ந்த கவிதா என்பது தெரிந்தது. இவர்கள் இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காப்பீடு நிறுவன வேலையில் சேர்ந்ததும், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் தங்களை பணியில் அமர்த்தியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : VAO ,Timiri ,Ayushman ,
× RELATED திருப்பூரில் வாடகை வீட்டில் 5 டன்...