×

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்கு பிரதமர் பதிலுரை தராதது ஜனநாயக தலைக்குனிவு: தொல்.திருமாவளவன் பேட்டி

 

மீனம்பாக்கம்: புதுடெல்லியிலிருந்து நேற்றிரவு ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் வந்திறங்கினார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றாமல் நிறைவேற்றப்பட்டு இருப்பது, இதுதான் முதன்முறை. மேலும், எதிர்க்கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவரை பேசவிடாமல் தடுத்து பதற்றத்தை உருவாக்கி, ஆளுங்கட்சியினர் மட்டுமே ஒன்றுகூடி அத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

குடியரசு தலைவரின் உரை தொடர்பான தீர்மானத்துக்கு பிரதமர் பதிலுரை ஆற்றாதது, இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள தலைக்குனிவு. இதற்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மேற்கொள் காட்டுவதாக கூறி, தனது உரையில் பிச்சை எடுக்கக்கூட பயன்படாத மொழி தமிழ் என்று தனது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுதான் மத்தியில் ஆளும் பாஜவினரின் மனநிலை. அவர்கள் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான மனநிலை கொண்டவர்கள் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

இதையடுத்து நிதியமைச்சருக்கு பதிலடி கொடுத்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். விசிக சார்பில், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும். அதேபோல் வாக்குச்சாவடி பணிக்குழு முகவர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : President of the Republic ,Parliament ,Democratic ,MRS. ,Fishing ,Liberation Leopards Party ,Tal Thal ,Air India ,New Delhi ,Thirumaalavan ,Chennai ,Indian Parliament ,
× RELATED பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில்...