கோபி: ஈரோடு மாவட்டம் கோபியில் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்ட தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டணிக்கு யார், யார் வரவேண்டும் என்பதை விஜய் விரைவில் முடிவு செய்வார். சரியான நேரத்தில் சிலர் வரும் வாய்ப்பு உருவாகும். விஜய், எந்த தேதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று முடிவு செய்தவுடன் அதற்கான பணிகள் நடத்தப்படும்.
என்டிஏ கூட்டணியில் பின்னால் வைக்கப்பட்டு இருக்கும் பேனரில் ஜெயலலிதா, எம்.ஜிஆர் படம் இல்லை. பிரதமர் படம் ஒருபுறமும், எடப்பாடி படம் ஒருபுறமும்தான் இருந்ததே தவிர, வேறு இல்லை. அப்படி என்றால் கட்சியை எங்கே எடுத்து செல்கிறார்கள், எந்த முகத்தை வைத்து வாக்கு கேட்கப் போகிறார்கள்? சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தவெகவில் விருப்ப மனுக்கள் பெறப்படுவது குறித்து நாளை தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது குறித்து தவகெ பேசி வருவதாக தகவல்கள் வெளிவருகிறதே என கேட்டதற்கு, ‘‘காங்கிரஸ் எந்தக் கட்சியுடன் பேசிக் கொண்டுள்ளார்கள் என்பதை டெல்லி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்’’ என தெரிவித்தார். விஜய் எப்போது பத்திரிக்கையாளர்களை சந்திப்பார் என்ற கேள்விக்கு, ‘‘விஜய் எப்போது திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அன்று குரல் கொடுப்பார் என்றார்.
