×

மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் மழை எதிரொலி அத்திக்கடவு ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

மஞ்சூர் : மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் பெய்த மழையால் அத்திக்கடவு ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கெத்தை உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகள், சிற்றோடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மஞ்சூர் சுற்றியுள்ள கீழ்குந்தா பேரூராட்சியின் முக்கிய குடிநீராதாரங்களாக உள்ள அம்மக்கல், ஊசிமலை, அப்புனாய், ஒசாட்டி, கட்லாடா நீர் தேக்கங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல் கிண்ணக்கொரை, கெத்தை பகுதிகளில் பெய்த மழையால் மின்சார உற்பத்திக்கு நீராதாரமாக உள்ள கெத்தை ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது.

இதனால், கெத்தை அணையின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. இதேபோல் தொட்டஹள்ளா, பிகுளி ஆறுகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் குந்தா அணையின் நீர் மட்டம் 86 அடி வரை உயர்ந்துள்ளது. மஞ்சூர் கோவை சாலையில் உள்ள அத்திக்கடவு ஆற்றிலும் கடந்த சில தினங்களாக நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

Tags : Manjoor ,Athikadavu river ,Nilgiris district ,Kuntha ,Upper Bhavani ,Avalanche ,Emerald ,Gethai ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான...