×

அன்புமணியை தொடர்ந்து ராஜ்யசபா எம்பி சீட் கேட்கும் டிடிவி: எனக்கும் எம்.பி. சீட் வேணும்… விழிபிதுங்கி நிற்கும் எடப்பாடி

சென்னை: அன்புமணியை தொடர்ந்து டிடிவி.தினகரனும் ராஜ்யசபா சீட் வேண்டும் என்று கேட்டுள்ளதால், என்ன செய்வது என்று தெரியாமல் எடப்பாடி பழனிசாமி விழிபிதுங்கி நிற்கிறார். இதனால் அதிமுகவினரும் தங்களுக்கு சீட் கிடைக்காது என்று பதற்றத்தில் உள்ளனர். தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் கூட்டணிகளை அமைப்பதில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக உள்ளன.

அதில், திமுக கூட்டணி மட்டும் அப்படியே உள்ளது. அதிமுக கூட்டணி பல பிரிவுகளாக பிரிந்து விட்டது. அதிமுகவும் பல பிரிவுகளாக பிரிந்து விட்டது. தற்போது பிரிந்த கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவரால் முடியாததால், ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயலை பாஜ இறக்கிவிட்டது.

அவர் அதிமுகவில் இருந்து பிரிந்த டிடிவி.தினகரனை அழைத்துப் பேசினார். அவரோ, தனக்கு ராஜ்யசபா சீட் வேண்டும். இந்த முறை நான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறிவிட்டார். மேலும், அவரிடம் இருந்த பலரும் வேறு கட்சிகளுக்கு தாவிவிட்டனர். இதனால் அவர் தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கிக் கொடுப்பதை விட தனக்கு போட்டியே இல்லாமல் சீட் வாங்குவதுதான் பெஸ்ட் என்று டிடிவி.தினகரன் முடிவெடுத்தார்.

ஏனெனில் அவருக்கு தேர்தல் பணியாற்றும் தளபதிகள் எல்லாம் திமுகவுக்கு தாவிவிட்டனர். அக்கட்சியில் ஆர்.கே.நகர் தொகுதி வெற்றிக்கு காரணமாக இருந்த செந்தில்பாலாஜி திமுகவில் சேர்ந்து விட்டார். வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த வெற்றிவேல் இறந்து விட்டார். எம்எல்ஏக்களாக இருந்த பலர் தற்போது பதவியை இழந்து, வேறு கட்சிகளுக்கு சென்று விட்டனர். இதனால் தேர்தலில் நின்று தோற்பதை விட போட்டியிடாமல் டெல்லிக்கு செல்வதுதான் பெஸ்ட் என்று அவர் முடிவு எடுத்து, தனக்கு எம்எல்ஏ சீட் முக்கியமில்லை.

ராஜ்யசபா சீட் ஒன்று வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு பாஜ சம்மதித்து விட்டது. இது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பாஜ தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாமக (அ) பிரிவு தலைவர் அன்புமணிக்கு ஒரு சீட் கொடுக்க வேண்டும். தேமுதிகவும் ஒரு சீட் கேட்கிறது. தற்போது டிடிவியும் கேட்கிறார். ஆனால் அதிமுகவுக்கு 2 சீட்தான் கிடைக்கும். அதில் மீண்டும் தனக்கு சீட் வேண்டும் என்று தம்பிதுரை கேட்கிறார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கேட்கிறார்.

என்ன செய்வது என்று பாஜ தலைவர்களிடம் திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் தற்போது 2 சீட்டையும் கூட்டணிக்கு விட்டுக் கொடுங்கள். அடுத்தமுறை வரும்போது ஒருவருக்கு கொடுக்கலாம் என்று கூறியுள்ளனர். அதற்கு எடப்பாடி சம்மதித்து விட்டார். இதனால் வருகிற பிப்ரவரி மாதம் காலியாகும் 2 பதவிகளை எந்த கூட்டணிக்கு கொடுக்கப்போகிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

அதேநேரத்தில் தேர்தலுக்குப் பிறகு அதிமுக கூட்டணி தோல்வியடைந்து 30க்கும் குறைவான தொகுதிகளை பெற்றால் ஒரு எம்பி சீட் கூட கிடைக்காது. அப்படி என்றால் தனக்கு வெளிமாநிலத்தில் பாஜ சார்பில் ஒரு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதை தொடர்ந்து தற்போது டிடிவி.தினகரனுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை எடப்பாடி உறுதிப்படுத்தியுள்ளார்.

மீதம் உள்ள ஒரு சீட்டை தேமுதிக அல்லது அதிமுகவில் ஒருவருக்கு கொடுப்பது. அன்புமணிக்கு சட்டப்பேரவையில் போட்டியிட கொடுப்பது என்று முடிவு எடுத்தனர். ஆனால் அவரோ தனது மனைவிக்கு ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குழப்பத்தில் இருந்து வருகிறார். அதிமுகவினரும் தங்களுக்கு சீட் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

Tags : Anbumani ,TTV ,Rajya Sabha ,Edappadi ,Chennai ,TTV.Dhinakaran ,Edappadi Palaniswami ,AIADMK ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED பாஜக இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி...