- Nallakannu
- எம். வீரபாண்டியன்
- சென்னை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மாநில செயலாளர்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…
சென்னை: நல்லகண்ணு தீவிர சிகிச்சையில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்த உண்மையற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவுக்கு (101), கடந்த 1ம் தேதி மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு உடல்நிலையில் நேற்று முன்தினம் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. மேலும், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவே முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நல்லகண்ணு காலமானார் என்று இணையத்தில் நேற்று இரவு தகவல் பரவின. அந்த தகவலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள செய்தியில், “நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்பி வருவது வேதனை அளிக்கிறது. அவரது உடல்நிலை சில நேரங்களில் பின்னடைவு கண்ட போதிலும், தற்போது சீராக இருந்து வருகிறது. மருத்துவர்கள் குழு அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகும் வரை யாரும் எதையும் நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்,”இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்த உண்மையற்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம். நல்லகண்ணுவின் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். தன் வாழ்வின் பெரும்பகுதியை நாட்டுக்காக அர்ப்பணித்தவர் நல்லகண்ணு,”இவ்வாறு தெரிவித்தார்.
