செய்யாறு, ஜன.29: செய்யாறு அருகே குண்ணத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் திருக்குறள் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. செய்யாறு ஒன்றியம் குண்ணத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் சமூக கலை இலக்கிய பேரவை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இதன் பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.செந்தில் முருகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் செல்வி வேணுகோபால், துணைத்தலைவர் விஜயராகவன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற 10 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட சாரணர் அமைப்பு ஆணையர் கை.செல்வகுமார் பரிசுகளை வழங்கினார். இதில் ஆசிரியர்கள் அருள், ஏழுமலை, கோதண்டராமன், ஆனந்தி, ஆனந்தன், சிவா, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.