×

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு; அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கும் அதிகரிப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

சென்னை: சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இதன் மூலம் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறுவர். மேலும் அரசு பணியில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும். புதிதாக 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்றும் சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழக அரசின் பல்வேறு சாதனைகளின் வரிசையில் மேலும் சில அறிவிப்புகளை வெளியிட விரும்புறேன். ‘கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்’ கீழ் ஏற்கனவே 2 லட்சம் வீடுகள் உருவாகும் நிலையில் மேலும் புதிதாக, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

கிராமப்புறப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குகின்ற ஊரகச் சாலைகளை மேம்படுத்துகிற ‘முதல்வரின் கிராமசாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்’ கீழ், 8 ஆயிரத்து 911 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 ஆயிரத்து 484 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமப்புறச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புதிதாக, ஆயிரத்து 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2,200 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்.

ஏழை மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பாதுகாக்கும் ‘சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ், ஏற்கனவே 33 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற, திருமணமாகாத பெண்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்’ கீழ் அளித்த விண்ணப்பங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாக 1 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.

இதற்கான விழா வரும் 4ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதன்முறையாக கலைஞர் தான் 2008-ல் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கினார். அந்தச் சாதனையின் தொடர்ச்சியாக சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும்;

பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 200 ரூபாயாகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும்; பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 200 ரூபாயும், மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு,

குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 100 ரூபாயும் வழங்கப்படும். மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் இந்த பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்குச் செலவினங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த அறிவிப்புகள் மூலம் தற்போதுள்ள சிறப்புக் காலமுறை ஊதியப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களும், இத்தகைய பணியிடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் பயனடைவார்கள்.

அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளில் ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை காலமான மே மாதத்தில் ஏற்கனவே அவர்கள் கோரிய ஊதியம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய அடுத்த முக்கிய கோரிக்கையான நிரந்தரப் பணி நியமனத்தைப் பொறுத்தவரையில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புறேன்.

அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் எப்போது வளரும் என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுடைய வாட்டத்தைப் போக்குவதற்கு அனைத்துத் துறைகளிலும் சமச்சீரான வளர்ச்சியை அடைந்திருக்கின்றோம்.

பெரிய நகரங்களுக்கு மட்டும்தான் தொழிற்சாலைகளா? பாலங்களா? சாலைகளா? நூலகங்களா? கல்லூரிகளா?  உள்கட்டமைப்பு வசதிகளா? என்று சலிப்புடன் கேட்டதை மாற்றி, அனைத்துப் பகுதிகளுக்கும், அனைத்து மாவட்டங்களுக்கும் அனைத்தையும் கொண்டு சென்றிருக்கின்றோம்.இவை அனைத்திலும் சமூகநீதியை, சமநீதியை நிலைநாட்டியிருக்கின்றோம்.

இந்த 5 ஆண்டுகால உழைப்பையும் வளர்ச்சியையும் பார்த்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். உறுதியாகச் சொல்கிறேன். நாங்கள்தான் மீண்டும் வருவோம்! நாங்கள்தான் மீண்டும் வருவோம்! மீண்டும் மீண்டும் வருவோம்! மீண்டும் வெல்வோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Anganwadi ,Chief of Legislation ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Shatunav ,
× RELATED துணை மருத்துவப் படிப்புகளுக்கும்...