×

கல்வியறிவு பெருக ஒரு பிரார்த்தனை

கூத்தனூர்

தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்கென்றே தனிக்கோயில் உள்ள திருத்தலம், கூத்தனூர். சரஸ்வதி இத்தலத்தில் கருவறையில் கோயில் கொண்டதோடு மட்டுமன்றி, அரிசொல் ஆறு எனப்படும் அரசலாற்றில் கங்கை, யமுனை நதிகளோடு கலந்து தட்சிண திரிவேணி சங்கமமாக பரிணமிக்கிறாள் என பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சமயம் நான்முகனுக்கும் சரஸ்வதிக்கும் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக இருவரும் பூமியில் பகுக்காந்தன், சிரத்தை எனும் பெயர்களில் பிறக்க, சிரத்தையாக பிறந்த சரஸ்வதி இத்தலத்தில் கோயில் கொண்டாள் என்கிறது தல வரலாறு.

பகுக்காந்தனாகப் பிறந்த நான்முகன் பித்ரு காரியங்களில் முக்கியமாகப் போற்றப்படுவார் என ஈசன் அருள் வழங்கியதால் கூத்தனூரில் அரசலாற்றில் புரியும் பித்ரு காரியங்கள் விசேஷ பலன்களைத் தருவதாக ஐதீகம். அம்பாள்புரி, ஹரிநாகேஸ்வரம் என புராண காலத்தில் அழைக்கப்பட்ட இத்தலத்தை இரண்டாம் ராஜராஜன், தன் சபையில் அரசவைப் புலவராக விளங்கிய சரஸ்வதியின் அருள் பெற்ற ஒட்டக் கூத்தருக்கு பரிசாக வழங்கினார்.

(ஒட்டக்)கூத்தருக்குப் பரிசாக வழங்கப்பட்டதால் இத்தலம் கூத்தன்+ ஊர் = கூத்தனூர் என்றாயிற்று. ஒட்டக்கூத்தருக்கும் ஆலயத்தில் தனி சந்நதி உள்ளது. விமானக் கலசம் ஞானத்தின் உருவாய் சரஸ்வதி இங்கு உறைவதைக் குறிக்கும் வகையில் ஐந்து எனும் எண்ணிக்கையில் உள்ளது. கருவறையில் வீணையை கையில் ஏந்தாத சரஸ்வதியை தரிசிக்கலாம். அர்த்த மண்டபத்தில் ஆலயத்தில் அருளாட்சி புரியும் மூர்த்தங்களின் உற்சவ விக்ரகங்கள் அருள்கின்றன. இத்தல நடராஜரின் பாதத்தின் கீழ் காணப்படும் முயலகன், பக்கவாட்டில் இல்லாமல் நேராக உள்ளது சிறப்பு. மகாமண்டபத்தின் இடது புறம் நான்கு முகங்களுடன் வேதம் ஓதும் நான்முகன் அருள்புரிகிறார்.

கருவறையின் முன் சரஸ்வதியின் வாகனமான ராஜ ஹம்ஸம் எனப்படும் அன்னம் அன்னையை நோக்கி கம்பீரமாக நிற்கிறது. கம்பருக்காக இந்த சரஸ்வதி கிழங்கு விற்கும் மூதாட்டியாகவும், இடையர் குலப் பெண்ணாகவும் நேரில் வந்து சங்கடங்கள் தீர்த்திருக்கிறாள். ஒட்டக்கூத்தரை எதிரிகள் சூழ்ந்து கொண்டு, பரணி பாடினால் விட்டுவிடுவதாகக் கூற, கூத்தரின் நாவில் அமர்ந்து பரணி பாடினாள், இந்த அன்னை.

பிறவியிலேயே பேச்சிழந்த புருஷோத்தமன் எனும் பக்தனுக்கு தன் தாம்பூல எச்சிலைத் தந்து பூவுலகம் போற்றும் புருஷோத்தம தீட்சிதர் ஆக்கிய பெருமை பெற்றவள், இந்ததேவி. பௌர்ணமி அன்று இந்த அன்னைக்குத் தேன் அபிஷேகம் செய்து, அந்த பிரசாத தேனை மோதிர விரலால் சரஸ்வதியை தியானித்தபடி உட்கொள்ள, கல்வியறிவு பெருகும் என்பது ஐதீகம்.

சரஸ்வதி பூஜையன்று பக்தர்கள் சரஸ்வதி தேவியின் பாதங்களை தாங்களே பூஜிக்கும் வகையில் கருவறையிலிருந்து நீண்ட பாதங்கள் அமையுமாறு அலங்கரிப்பது கண்கொள்ளாக் காட்சி. விஜயதசமி அன்று புகழ்பெற்ற கலைஞர்கள் இத்தலம் வந்து தங்கள் கலைத்திறமையை தேவிக்கு அர்ப்பணிப்பது வழக்கம். மாணவ, மாணவியர் தேர்வு எழுதும் முன் தங்கள் எழுதுகோலை இந்த தேவியின் முன் வைத்து வணங்கிச் செல்கின்றனர். மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் எனும் ஊரிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.

கிருஷ்ணா

Tags : Thanikoe, Koothanur ,Saraswati Devikenne ,Kootanur Tamil Nadu ,Saraswati ,Arisol River ,Ganga ,Yamuna rivers ,Takhshina Triveni Sangama ,
× RELATED மழலை வரமருளும் சந்தானவல்லி