ஊட்டி : நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கோத்தகிரி நடுஹட்டி பகுதியில் ரூ.2.98 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்பை கட்டுமான தொழிலாளர்களுக்கு கலெக்டர் வழங்கினார். ஊட்டியில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார்.
தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 135 மனுக்கள் வந்திருந்தன. இதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கோத்தகிரி நடுஹட்டி பகுதியில் ரூ.2.98 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்பினை 3 கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார்.
வரும் 20ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில், நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாட்டில், கலந்து கொள்வதற்கு ஏதுவாக, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எழுத்து தேர்வில் கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு திருக்குறள் புத்தகத்தினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு முதலமைச்சரால் சென்னை தீவு திடலில் 5ம் ேததி நடைபெற்ற விழாவில் 155 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்திற்கு வழங்கிய 5 வாகனங்களின் சாவிகளை ஓட்டுநர்களிடம் கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் பழனிச்சாமி (நிலம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் லோகநாயகி (பொது), கண்ணன் (கணக்குகள்), மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
