×

கடன் அளவை வைத்து உ.பி. பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது பிழை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவு

சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உ.பி. பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது பிழை என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! ஒரு மாநிலத்தின் மொத்த கடனை வைத்து அந்த மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவது என்பது பிழையானது.

அமெரிக்காவில் தொடங்கி இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், கனடா வரை எல்லா வளர்ந்த நாடுகளின் மொத்த கடன் ஆண்டுதோறும் கூடுகிறது. இந்தியாவின் மொத்தக் கடனும் எல்லா மாநிலங்களின் மொத்தக் கடன்களும் ஆண்டுதோறும் கூடுகின்றன. இது இயல்பு. மொத்தக் கடன் என்பது சரியான அளவை அல்ல. மொத்த உற்பத்தியில் மொத்தக் கடன் எத்தனை விழுக்காடு (சதவீதம்) என்பதே பொருத்தமான அளவை.

தமிழ்நாட்டில் இந்த அளவை 2021-22 முதல் 2025-26 வரை ஸ்திரமாக இருந்து வருகிறது. நிதிப் பற்றாக்குறை ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்பட்டு 2025-26ம் ஆண்டில் நிதி ஆயோக் விதித்த வரம்பான 3% என்ற நிலையை தமிழ்நாடு எட்டும் என்று இந்த ஆண்டின் மதிப்பீடு சுட்டிக் காட்டுகிறது. இது பாராட்டக்கூடியது. நிதி மேலாண்மை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்பது ஏற்புடையது. ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உத்தரபிரதேசத்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது என்பது பிழை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Union minister ,P. Chidambaram ,Chennai ,Tamil Nadu ,Former Union Minister ,Former ,P. ,Chidambaram ,New Year ,
× RELATED ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு இல்லை: பட தயாரிப்பு நிறுவனம்