சென்னை: மருத்துவமனையில் பயிற்சி பெற வந்த பிசியோதெரபிஸ்ட் மாணவிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து பலாத்காரம் செய்த டாக்டரை போலீசார் கைது செய்தனர். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது மாணவி. இவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் 4ம் ஆண்டு படித்து வருகிறார். பெரம்பூரில் உள்ள பிசியோதெரபிஸ்ட் டாக்டர் கார்த்திகேயன் (27) என்பவரின் மருத்துவமனையில், கடந்த 17ம் தேதி பயிற்சிக்கு சேர்ந்துள்ளார்.
இவருக்கு மாதம் ரூ.4 ஆயிரம் சம்பளத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிசியோதெரபிஸ்ட் தேவைப்படும் சிலருக்கு வீடுகளுக்கு இந்த மாணவி சென்று உடற்பயிற்சி செய்ய கற்றுக் கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில், டாக்டர் கார்த்திக் செல்போனில் மாணவியை தொடர்புகொண்டு, ‘‘சில வீடுகளுக்கு சென்று பிசியோதெரபிஸ்ட் பணி செய்ய வேண்டும்’’ என தெரிவித்ததால், மாணவி உடனடியாக மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இதன் பின்னர் கார்த்திகேயனுடன் 2 வீடுகளுக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு கொளத்தூர் ஜெயந்தி நகர் 2வது தெருவில் உள்ள ஒரு பெண்ணுக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது காபி, டீ சாப்பிடலாம் என்று டாக்டர் கூறியுள்ளார். அதற்கு மாணவி, நான் டீ, காபி சாப்பிடுவதில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து டாக்டர் தனது காரில் வைத்திருந்த குளிர்பானத்தை எடுத்து மாணவிக்கு கொடுத்துள்ளார்.
அதை குடித்தவுடன் மாணவிக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. இதன்பின்னர் மாணவியை கொளத்தூர் ஜெயந்தி நகர் 2வது மெயின் ரோட்டில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் மாணவி மயங்கியுள்ளார். இதையடுத்து அவரை டாக்டர் கார்த்திகேயன் பலாத்காரம் செய்துள்ளார். மாணவி கண் விழித்து பார்த்தபோது ஆடைகள் அனைத்தும் களைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். அப்போது டாக்டர் இல்லை என்று தெரிகிறது.
இதையடுத்து உடைகளை சரி செய்து கொண்டு வெளியே வந்த மாணவி, தனது சகோதரிக்கு போன் செய்து நடந்தது பற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது சகோதரி உறவினர்களுடன் உடனடியாக கார்த்திகேயனின் மருத்துவமனைக்கு வந்து கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். செம்பியம் போலீசாரின் அறிவுறுத்தலின்படி, கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார்.
கொளத்தூர் உதவி கமிஷனர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் ஆகியோர் விசாரணை நடத்தி கார்த்திகேயனை கைது செய்தனர். கார்த்திகேயன் மனைவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
போலீசாரிடம் டாக்டர் கார்த்திகேயன் கூறும்போது, ‘ஒரு வேகத்தில் மாணவியிடம் அப்படி நடந்துகொண்டேன். இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறேன்’ என்றார். இதையடுத்து பெண் வன்கொடுமை, கற்பழிப்பு வழக்கு உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
* போலீசாரிடம் டாக்டர் கார்த்திகேயன் கூறும்போது, ‘ஒரு வேகத்தில் மாணவியிடம் அப்படி நடந்துகொண்டேன். இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறேன்’ என்றார்
