ஈரோடு: ஈரோட்டில் 5வயது சிறுவன் மூச்சுக்குழாயில் வாழைப்பழம் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அன்னை சத்யா நகரில் வசித்து வருபவர்கள் மாணிக்கம், முத்துலட்சுமி தம்பதி. இவர்கள் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இதில் மூத்த சிறுவன் சாய்சரண் மற்றும் 2வயதில் பெண் குழந்தையும் உள்ளது. நேற்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றிருந்த நிலையில், மகன் சாய்சரணை தனது பாட்டியிடம் விட்டு சென்று உள்ளனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் அங்கிருந்த வாழைப்பழத்தை சாப்பிட்டுள்ளான். அதை சாப்பிட்டபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த பாட்டி அக்கபாக்கதினர் உதவியுடன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சாய்சரணை அழைத்து சென்றுள்ளார். அங்கு வந்த மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்து பார்த்ததில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சிறுவன் சாப்பிட்ட வாழைப்பழமானது மூச்சுக்குழாயில் சென்றதால் சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதை தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனுடைய உடல் பிரதே பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
