- உயர்நீதிமன்றத்தில்
- தொழிலாளர் உரிமைகள் இயக்கம்
- சென்னை
- பாரதி
- கீதா
- ஜெனோவா
- வசந்தி
- அம்பத்தூர்
- சென்னை கார்ப்பரேஷன்
சென்னை: சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தூய்மைப் பணியாளர்களான பாரதி, கீதா, ஜெனோவா மற்றும் வசந்தி ஆகிய 4 பேர் அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்க அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
ஐகோர்ட் உத்தரவின்படி, இவர்கள் 4 பேரின் உடல்நிலையை பரிசோதித்த ஆவடி அரசு மருத்துவமனை மருத்துவர், உடல் நிலை மோசமடைந்துள்ளதாக அறிக்கை அளித்திருந்தார். இந்த அறிக்கையை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் தாக்கல் செய்த காவல் துறை தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகிலன், உண்ணாவிரதம் இருப்பவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறு 4 பேர் உண்ணாவிரதத்தை தொடர அனுமதிக்கலாம் என்றார். ஆனால், 4 பேரின் உடல்நிலை இயல்பாக உள்ளதாக உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தனியார் மருத்துவமனை மருத்துவர் மூலம் 4 பேரின் உடல் நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உழைப்போர் உரிமை இயக்கத்துக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தனியார் மருத்துவரின் அறிக்கையில், 4 பேரும் நல்ல உடல்நிலையில் இருப்பதாக வும், உடல்நிலை மோசமானால் வேறு 4 பேர் உண்ணாவிரதத்தை தொடர்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது, உண்ணாவிரதம் இருப்போரின் உடல் நிலையில் அக்கறை கொண்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 4 பேரின் உடல் நிலை குறித்து தினமும் மாலை 7 மணிக்கு அம்பத்தூர் போலீசாருக்கு அறிக்கை தர உழைப்போர் உரிமை இயக்கத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
