திருமலை: போலி மதுபான தயாரிப்பு வழக்கில் கைதான ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் அவரது தம்பி ஆகியோர் வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் போலி மதுபான வழக்கில், மதுபான தொழிற்சாலை உரிமையாளரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னாள் அமைச்சர் ஜோகிரமேஷின் ஆதரவாளருமான ஜனார்தன்ராவ் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி, முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து இப்ராஹிம்பட்டணத்தில் உள்ள வீட்டில் இருந்த அவரை சிறப்பு புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள், கலால் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய அவரது தம்பி ராம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை விஜயவாடாவில் உள்ள கலால் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். நேற்றுமுன்தினம் இரவு விஜயவாடா நீதிமன்றத்தில் இருவரையும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் விஜயவாடா சிறையில் அடைக்கப்பட்டனர்.
