×

செட்டியாபத்து பஞ்.தலைவருக்கு சர்வதேச முத்தமிழ் விருது

உடன்குடி, ஜன. 1: உடன்குடி அருகேயுள்ள செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகனுக்கு சர்வதேச முத்தமிழ் விருது வழங்கப்பட்டது. மதுரை முத்தமிழ் நாட்டுப்புற கலைகள் ஆராய்ச்சி நிறுவனம், மலேசியா உலகத் தமிழ்க்காப்பிய ஆராய்ச்சி நிறுவனம், மதுரை கே.ஆர்.செல்லம்மாள் நினைவு உலகத்தமிழாய்வு மையம் இணைந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவரும் கலைஞர்கள், சமூகசேவர்களை தேர்ந்தெடுத்து சர்வதேச முத்தமிழ் விருது வழங்கி வருகிறது. இந்த விருதுக்கு உடன்குடி யூனியன் செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் தேர்வு செய்யப்பட்டார். மதுரை திருநகர் முத்துதேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் விருது வழங்கும் விழா நடந்தது. மதுரை மாநகர காவல் உதவிஆணையர் டாக்டர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மதுரை முத்தமிழ் நாட்டுபுறக்கலைகள் ஆராய்ச்சி நிறுவனரும், அறங்காவலருமான ஞானவேல் வரவேற்றார். மதுரை உலக தமிழ்ச்சங்க முன்னாள் இயக்குநர் முனைவர் பசும்பொன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகனுக்கு சர்வதேச முத்தமிழ் விருது வழங்கினார். விருது பெற்ற பஞ்.தலைவர் பாலமுருகன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags : Chettiapattu Panch ,
× RELATED கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்