ஈரோடு, டிச. 29: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஈரோட்டில் ஜனவரி மாதம் 3ம் தேதி மக்கள் கிராம சபை கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தினை சிறப்பாக நடத்துவது என ஈரோடு தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோடு மணல் மேட்டில் உள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி முன்னிலை வகித்து பேசினார். இதில், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஜனவரி 3ம் தேதி ‘மக்கள் கிராம சபை’ கூட்டம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தினை சிறப்பாக நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மக்கள் கிராம சபை கூட்டத்திற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் ஜனவரி மாதம் 3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு வருகிறார். அன்றைய தினம் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகள் காலை 9 மணிக்கு துவங்க இருக்கிறது. தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கிராமத்தில் மக்கள் கிராம சபை கூட்டம் நடக்கிறது.
எந்த கிராமத்தில் கூட்டம் நடத்துவது என இன்று (29ம் தேதி) முடிவு செய்யப்படும். மக்களை சந்திப்பதற்காகவும், மக்களின் குறைகளை கேட்பதற்காகவும், அவர்கள் கூட்டத்தில் அளிக்கும் மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ஈரோடு தெற்கு மாவட்டத்தில் 11 கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், இந்த பணிகளை வேகப்படுத்தவும், சிறப்பாக நடத்துவதற்காகவும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இந்த கூட்டம் சிறப்பாக நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கந்தசாமி, மாநில நிர்வாகிகள் சச்சிதானந்தம், சந்திரக்குமார், மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், செல்லப்பொன்னி, சின்னையன், பழனிச்சாமி, வில்லரசம்பட்டி முருகேசன், மணிராசு, மாநகர செயலாளர் சுப்பிரமணி, தலைமைக்கழக பேச்சாளர் இளையகோபால், பகுதி கழக செயலாளர்கள் குமாரவடிவேலு, நடராஜன், செல்வராஜ், அக்னி சந்துரு, மணிகண்ட ராஜா, குறிஞ்சி தண்டபாணி, ராமச்சந்திரன், மகளிர் அணி அமைப்பாளர் இளமதி, தொண்டர் அணி அமைப்பாளர் திலகவதி, இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.