- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- விண்வெளி மற்றும் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு
- சென்னை
- இந்தியா
* தமிழ்நாட்டின் ஜிடிபி.யில் உற்பத்தி துறை 20% பங்கு
* மின்னணு பொருள் உற்பத்தியில் முதலிடம்
சென்னை: மின்னணு பொருள் உற்பத்தியில் முதலிடம், தமிழ்நாட்டின் ஜிடிபி.யில் உற்பத்தி துறை 20 விழுக்காடு பங்கு வகிக்கிறது.இந்தியாவிலேயே 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இரட்டை இலக்கை எட்டி பிடித்திருக்கும் ஒன் அண்ட் ஒன் மாநிலம். இப்படி அனைத்து வகையான தொழில்களிலும் தமிழ்நாடு தடம் பதித்து, தமிழ்நாடு உற்பத்தி துறையில் லீடராக மாறிக்கொண்டு வருகிறது என விண்வெளி-பாதுகாப்பு சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களுக்கான ‘ஏரோ-டெப்-கான் 25’ என்ற சர்வதேச வணிக மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு இன்றைய தினம், இந்தியாவை ஈர்க்கும் நிலையில் இருந்து, உலகை ஈர்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறது. இப்படிப்பட்ட முன்னோடியான மாநாடுகளை தொழில்துறை சார்பில் நடத்துவதால்தான், இந்த மாநாடுகள் எல்லாம், உலகளவில் பேசப்படுகிறது. அதுமட்டுமல்ல, அனைத்துவிதமான வளர்ந்து வரும் தொழில்களையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருப்பதன் அடையாளம்தான் இந்த மாநாடு.
இது வெறும் கண்காட்சி இல்லை. புதிய தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் ஆகியோரை கண்டறிந்து, அவர்களிடையே கூட்டு முயற்சியில் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்கான தளம்.
தமிழ்நாடு அனைத்து வகையான தொழில்களிலும் தடம் பதித்து வருகிறது. தமிழ்நாடு உற்பத்தி துறையில் லீடராக மாறிக்கொண்டு வருகிறது. ஏற்றுமதி செய்யப்படும் மொத்த தானியங்கி வாகனங்களில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் எவ்வளவு தெரியுமா? 40 விழுக்காடு. அதுமட்டுமா? மூன்றில் இரண்டு பங்கு இருசக்கர மின்வாகனங்கள் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகிறது. 2024-25ம் ஆண்டில், 14.6 பில்லியன் டாலர் மதிப்புடைய மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து அதிலும் நாம்தான் முதலிடம். 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இருக்கிறது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டின் மொத்த ஜிடிபில் உற்பத்தி துறை 20 விழுக்காடு பங்கு வகிக்கிறது. உலகளாவிய பொருளாதாரத்தில், தமிழ்நாடு முன்னணி 50 இடங்களில் இருக்கிறது. இந்தியாவிலேயே 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இரட்டை இலக்கை-ஐ எட்டிப் பிடித்திருக்கும் ‘ஒன் அன்ட் ஒன்’ மாநிலம் தமிழ்நாடுதான். எதை செய்தாலும், ஆல்ரவுண்டாக, பெஸ்ட்டாக செய்வதால்தான் இது சாத்தியமாகி இருக்கிறது. இதில், மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது பாதுகாப்பு தொழில்துறை. ‘தமிழ்நாடு பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடத் திட்டம்’ இந்த துறை சார்ந்த வளர்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த துறையில், இந்தியாவின் உற்பத்தி மையமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்று விரும்புகிறேன். பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடம் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்ற இருக்கிறது.
உயர்தர ஜெட் என்ஜின் பாகங்களில் இருந்து, டிரோன்கள் உற்பத்தி வரை நடைபெற இருக்கிறது. வளர்ந்துவரும் விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி பிரிவுகள் இதில் இருக்கிறது. தமிழ்நாடு பாதுகாப்பு தொழிற்துறை வழித்தட தொலைநோக்கு திட்டம் வெறும் எண்ணமாக மட்டுமல்லாமல், பல முக்கிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்ததன் மூலமாக, இந்தியாவின் பாதுகாப்பு துறையின் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் இடத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடத்தில் அமைந்திருக்கும் நகரங்களில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது.
* கோவை வரப்பட்டியில், 360 ஏக்கரில் ‘பாதுகாப்பு தொழிற்துறைப் பூங்கா’ அமைக்கப்பட்டு வருகிறது.
* விமானம் பழுதுபார்த்தல், பராமரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ள நேரடியாக ஓடுதள அணுகு வசதியுடன் கூடிய வான்வெளிப் பூங்கா, சூலூரில் 200 ஏக்கரில் அமைக்கப்பட்டு வருகிறது.
* திருச்சியில் 90க்கும் மேற்பட்ட எம்எஸ்எம்இ நிறுவனங்கள் இயந்திரவியல் உற்பத்தி துறையில் தங்கள் தொழில்களை பெருக்க TREAT அமைப்பு உதவுகிறது.
* சென்னைக்கு அருகில் வல்லம் வடகாலில் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை வான்வெளி நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்டு வரும் ஏரோ-ஹப் என்ற திட்டம் முடிவடையும் நிலையில் இருக்கிறது.
இப்படி, இதுபோன்ற அனைத்து திட்டங்களும், முதலீடுகளை ஈர்த்தல் – புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் – இந்த துறையில் இந்தியாவின் தற்சார்பை உறுதி செய்தல் ஆகியவற்றில் தமிழ்நாட்டின் தனித்துவத்தை உறுதி செய்கிறது. ஓசூரில் நடந்த TN Rising முதலீட்டாளர் மாநாட்டில் வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறையில் ஈர்க்கப்பட்ட முக்கியமான முதலீடுகள் – உலகளவில் உற்பத்தி துறையில் ஓசூர் நகரத்தின் பங்கை உறுதி செய்கிறது. இந்த முதலீடுகள், தமிழ்நாட்டின் தொழிற்துறை சூழல், திறமையான மனிதவளம் மற்றும் சிறப்பான உற்பத்தி சங்கிலிக்கு சான்றாக இருக்கிறது.
தமிழ்நாடு பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியதில் இருந்து, இதுவரை 23 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கிறது. இதில், 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டிருக்கிறது. 2032க்குள் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க நாங்கள் இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இந்த வழித்தடத்தில் இருக்கும், ஒவ்வொரு நகரமும் தனித்துவமான மையங்களாக விளங்குகிறது. சென்னை என்பது ஆராய்ச்சி மற்றும் கடற்படை அமைப்புகளுக்கான மையமாகவும், கோயம்புத்தூர் – நுண்பொறியியல் திறனுக்கான மையமாகவும், ஓசூர் – வான்வெளி மற்றும் மின்னணு தொழில்நுட்ப மையமாகவும், சேலம் – உயர் தொழில்நுட்ப பொருட்கள் மையமாகவும், திருச்சி – கனரக இயந்திர உற்பத்தி மையமாகவும் இருக்கிறது.
இவை எல்லாம் ஒன்றாக சேர்த்து, தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் முதலீட்டிற்கு உகந்த இடமாக விளங்குவதை காட்டுகிறது. தூத்துக்குடியில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை வைத்து விண்வெளித் துறையில் பொருளாதார வளர்ச்சிக்கான தெளிவான திட்டப்பாதையை நாங்கள் வகுத்திருக்கிறோம். இந்திய விண்வெளி துறை வளர்ச்சிக்கு – தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். சென்னை காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம், சூலூர் மற்றும் வல்லம் வடகால் வான்வெளி பூங்காக்கள் – தூத்துக்குடியில் அமையவுள்ள விண்வெளி பூங்கா ஆகிய அனைத்தும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் பாதுகாப்பு துறைக்கும் உறுதுணையாக இருக்கிறது.
இந்த மாநாட்டில், பங்கேற்றிருப்பவர்களிடம் நான் சொல்ல விரும்புவது, தமிழ்நாட்டில் உங்களை கவரும் தொழில் சூழல் இருக்கிறது. திறமையான இளைஞர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பெரிய தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு மட்டுமல்ல, எம்எஸ்எம்இ நிறுவனங்களின் பங்கும் பெரிய அளவில் இருக்கிறது. அதில், 700-க்கும் மேற்பட்டவை வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் செயல்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய காத்திருக்க வேண்டியதில்லை. தமிழ்நாடு இப்போதே தயாராக இருக்கிறது.
பாதுகாப்பு அமைச்சகம், D.R.D.O. மற்றும் நம்முடைய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் – தங்களின் தொழில்நுட்பம், திறன் மற்றும் ஒத்துழைப்பை வழங்கி, இந்த பயணத்தில் எங்களோடு இணைந்து செயல்படுகிறார்கள். புதிய கூட்டுத் திட்டங்கள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வான்வெளி, கடல், விண்வெளி துறைகளில் புதிய தொழில் முயற்சிகளுக்கான தொடக்க மேடைதான், இந்த மாநாடு. இன்று இந்த நிகழ்வில். எங்களோடு இணைந்திருக்கும் 19-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் சேர்ந்து, தொழில் வளர்ச்சிக்காக செயல்படுவோம் என்று உறுதி அளிக்கிறேன். செயல் வேகத்துடன், உறுதியுடன், உங்கள் இலக்குகளை நிறைவேற்ற தமிழ்நாடு முழு ஆதரவளிக்கும்.
வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றிற்கான முன்னணி தளமாக தமிழ்நாடு திகழ வேண்டும். அதற்கு உங்கள் எல்லோருடைய ஆதரவும் தேவை. வானூர்தி, விண்வெளி, கப்பல் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு துறைகளில் புதுமைகள் நிறைந்த – ஏற்றுமதிக்கு உகந்த – தன்னிறைவு பெற்ற – இந்தியாவை உருவாக்க பாதுகாப்புத்துறையில் பணியாற்றும் நண்பர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும். இது, ஒரு புதிய காலத்தின் தொடக்கமாக அமையட்டும். இந்தியாவின் பாதுகாப்பை மட்டுமல்ல, உலக அமைதி, வளம் மற்றும் முன்னேற்றத்தை இயக்கும் ஆற்றலாகவும் தமிழ்நாடு திகழட்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, எம்பி டி.ஆர்.பாலு, எம்எல்ஏ இ.கருணாநிதி, கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி, டிஆர்டிஓ விஞ்ஞானி டாக்டர் தாஸ், ஏரோஸ்பேஸ் முதன்மை செயல் அலுவலர் ஸ்டீபன் காஸ்டெட், தொழில் துறை செயலாளர் அருண் ராய், மேலாண்மை இயக்குநர்கள் தாரேஷ் அகமது, சந்தீப் நந்தூரி, ஏர் கமாண்டர் சர்மா, டிஆர்டிஓ முன்னாள் தலைவர் கிறிஸ்டோபர், கில் இந்தியா தலைவர் பாலசுப்பிரமணியன், இந்திய கடற்படை அதிகாரி தீஷ் ஷினாய், வான்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களை சார்ந்த தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* தமிழ்நாட்டில் திறமையான இளைஞர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
* பெரிய தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு மட்டுமல்ல, எம்எஸ்எம்இ நிறுவனங்களின் பங்கும் பெரிய அளவில் இருக்கிறது.
* பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய காத்திருக்க வேண்டியதில்லை. தமிழ்நாடு இப்போதே தயாராக இருக்கிறது.
* புதிய கூட்டுத் திட்டங்கள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வான்வெளி, கடல், விண்வெளி துறைகளில் புதிய தொழில் முயற்சிகளுக்கான தொடக்க மேடைதான் இந்த மாநாடு.
* வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றிற்கான முன்னணி தளமாக தமிழ்நாடு திகழ வேண்டும்.
