×

அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்; ஜெயித்து காண்பிப்போம் அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை: லட்சக்கணக்கானோர் திரண்ட திமுக இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சியில் பரபரப்பு பேச்சு

திருவண்ணாமலை: சங்கிகள் படையோடு வந்தாலும் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்; ஜெயித்து காண்பிப்போம் என்று திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்து உள்ளார். திருவண்ணாமலை வாணியந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் திடலில், வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நேற்று நடந்தது.

அதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 91 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு, மாநில இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, திருச்சி என்.சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ மற்றும் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பொதுப்பணித்துறை அமைச்சரும், வடக்கு மண்டல பொறுப்பாளருமான எ.வ.வேலு வரவேற்றார். நிகழ்ச்சியில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: முதலில் உங்களைப் பற்றி சொல்கிறேன். மாஸாக கெத்தாக இங்கு வந்திருக்கும் திரவிடியன் ஸ்டாக்ஸ் எல்லோருக்கும் என்னுடைய முதல் வணக்கம். எதிரில் இருக்கும் உங்களைப் பார்க்கும்போது, ஒரு ஐம்பது ஆண்டுகள் டைம்-டிராவல் செய்து பின்னால் சென்றது போன்று, எனக்கு இருக்கிறது.

உங்களைப் போன்ற இளைஞனாக கிராமம் கிராமமாகத் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து, இந்த இளைஞரணியை வளர்த்தெடுத்த ஞாபகங்கள் எல்லாம் வருகிறது. எத்தனை ஞாபகங்கள்? இரவு பகல் பார்க்காமல், தூக்கம் இல்லாமல், கிராமங்கள்தோறும் கொடி ஏற்றம், திண்ணை பிரசாரம், நாடகம், பொதுக்கூட்டம் எனக் கழக நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். அப்படி உழைத்து, வளர்த்த திராவிட முன்னேற்றக் கழகம், 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறோம்.

அப்படிப்பட்ட கழகத்திற்கு, புது ரத்தமாக வந்திருக்கும் உங்களைப் பார்க்கும்போது- புது மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பிறக்கிறது. அதுமட்டுமல்ல, உங்களுடைய எனர்ஜி எனக்கும் ‘டிரான்ஸ்பர்’ ஆகியிருக்கிறது. ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துவிட்ட ஆணவத்தில், வலதுசாரி அமைப்புகளும், பிற்போக்குச் சக்திகளும் மிகவும் வேகமாக முன்னெப்போதும் இல்லாத ஆக்ரோஷத்துடன் செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள்.

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பக்கூடிய மக்களிடம், பொய்களை, அவதூறுகளை, பிற்போக்கு எண்ணங்களை, தேன் தடவிய வார்த்தைகளில் கொண்டு சென்று சேர்க்க முயற்சி செய்கிறார்கள். எடுத்துக்காட்டுக்குச் சொல்கிறேன், எல்லோரும் பேமிலி, ப்ரண்ட்ஸ் வாட்ஸ்அப் குழுவில் இருப்பீர்கள். அதில், சொந்தங்கள் தங்களின் அன்பை, உணர்வை பரிமாறிப்பார்கள். ஆனால், அதில் ஒருவர் மட்டும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் விஷம் தோய்ந்த கருத்துகளை பார்வர்ட் செய்வார். பலரும், எதையோ படிக்காமல் அனுப்பியிருக்கிறார் என்று கடந்து சென்றுவிடுவீர்கள்.

அதை அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டு, அவரும் தொடர்ந்து மெசேஜ் அனுப்புவார். அப்படிப்பட்டவர்களின் பிற்போக்குக் கருத்துகள் தொற்றுநோய் போன்று வேகமாகப் பரவும். அதைத் தடுக்க வேண்டும் என்றால், அதற்கு மாற்று மருந்தான நம்முடைய கொள்கைகளையும் நாம் தீவிரமாகப் பரப்ப வேண்டும். பொய்யை பேசுவதற்கு ஒருவர் தயங்காதபோது, உண்மையைப் பேசுவதற்கு நெஞ்சில் உரமிருக்கும் நாம் ஏன் தயங்க வேண்டும்.

எதற்காக இதை சொல்கிறேன் என்றால், இப்போது நம்முடைய தோளில், தமிழ்நாட்டையும், தமிழ்மொழியையும் காக்க வேண்டிய கடமை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவையும் நாட்டின் பன்மைத்துவத்தையும் காக்க வேண்டிய கடமை இருக்கிறது. இந்தியாவிலேயே பி.ஜே.பி.,க்கு எதிராக ஐடியாலஜிக்கல் பைட் (கருத்தியல் போர்) செய்துகொண்டு இருக்கும் ஒரே மாநிலக் கட்சி, தி.மு.க.,தான். அவர்களால் வெற்றி கொள்ள முடியாதது, நம் தமிழ்நாட்டை மட்டும்தான்.

அதனால்தான் அமித்ஷா போன்றோருக்கு நம் மீது எரிச்சல். அண்மையில் கூட, என்ன பேசினார்? பீகாரை ஜெயித்துவிட்டோம், “அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான்” என்று சொல்கிறார். மாண்புமிகு அமித்ஷா அவர்களே, நீங்கள் இல்லை, உங்கள் சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும், உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இது தமிழ்நாடு. இது தமிழ்நாடு. எங்களின் கேரக்டரையே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே, அன்புடன் வந்தால், அரவணைப்போம், ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம், எதிர்த்து நிற்போம்.

உங்களை ஜெயித்துக் காண்பிப்போம். மீண்டும் சொல்கிறேன். அன்புடன் வந்தால், அரவணைப்போம், ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம். எதிர்த்து நிற்போம். உங்களை ஜெயித்துக் காண்பிப்போம். இங்கு கூடியிருக்கும் இளைஞரணி தம்பிகளுக்கு சொல்கிறேன். ஒவ்வொரு தலைமுறைக்கு முன்பும் வரலாறு ஒரு கடினமான கேள்வியை முன்வைக்கும். அதற்கு ரியாக்ட் செய்ய முடியாமல், மண்டியிடுகின்றவர்களை, வரலாறும் மறந்துவிடும். மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.

ஆனால், வரலாறு முன்வைக்கும் கேள்விகளை எதிர்த்து, பைட் செய்து வரலாற்றைத் திருத்தி எழுதுகின்றவர்களை, மக்களும் மறக்க மாட்டார்கள், வரலாறும் மறக்காது. நீங்கள் எல்லாம் வரலாறு படைக்க வேண்டும். அதற்கு எப்போதும் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். மக்களுக்காக இருப்பதுதான் அரசியல். அந்த அரசியலை செய்யத்தான், உங்கள் எல்லோருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. மக்களிடம் செல்லுங்கள். அவர்கள் கூடவே வாழுங்கள். அவர்களுக்காகக் குரல் கொடுங்கள். இதுதான் உங்களுக்கான டாஸ்க்.

இங்கே உதயநிதி சொன்னதுபோல, நீங்கள் ஒவ்வொருவரும் மினிமம் பத்து இளைஞர்களை உங்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு அரசியல் உணர்வை, நம்முடைய கொள்கைகளை, திராவிட மாடல் அரசின் சாதனைகளைக் கொண்டு செல்லுங்கள். கடந்தகால ஆட்சியாளர்கள், செய்த தவறுகளை, குற்றங்களை, துரோகங்களை மக்களுக்கு நினைவுபடுத்துங்கள். அவர்கள் மீண்டும் வந்தால், தமிழ்நாடு என்னென்ன ஆபத்துகளைச் சந்திக்கும் என்று மக்களிடம் சொல்லுங்கள்.

நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்குத் தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கும், நம்முடைய திட்டங்களைப் பற்றி எடுத்துச்சொல்லுங்கள். நான் உறுதியோடு சொல்கிறேன், நாட்டில், ஏன் உலகத்திலேயே எந்த ஆட்சியும் நாம் செய்திருக்கும் அளவிற்கு முத்திரைத் திட்டங்களைச் செய்திருக்க மாட்டார்கள். நீங்களே பார்த்திருப்பீர்கள், நம்முடைய அரசின் திட்டங்களால் பயனடைபவர்களின் பேட்டிகளை, பல்வேறு ஊடகங்கள் வெளியிடுகிறார்கள். அப்படி, பேட்டி அளித்த ஒரு தாய் பேசினார்,

தன்னுடைய பிள்ளைகள் பணம் அனுப்பவில்லை என்றாலும், தனக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை வாங்க, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் உதவியாக இருக்கிறது என்று சுயமரியாதை உணர்வுடன் பேசினார். மற்றொரு பேட்டியில், பூ விற்கும் பெண் ஒருவர், ஆயிரம் ரூபாயை வைத்து, பூ வாங்குகிறேன், விடியல் பயணத்தில் சென்று அதை விற்றுவிட்டு வருகிறேன். இதையெல்லாம் முதலீடாக மாற்றிச் சம்பாதிக்கிறேன் என்று சொன்னார்.

இப்படி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய, ஒரு கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 பெண்கள் தங்களின் பணத்தேவைக்கு மற்றவர்களை எதிர்பார்த்திருந்த காலம் சென்று, அக்கவுண்ட்டில் மாதா மாதம் பணம் வருவது, புது தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. “கல்வியில் சிறந்த தமிழ்நாடு”, “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” போன்ற நிகழ்ச்சிகளை ஏன் நடத்துகிறோம்? நம்முடைய திட்டங்களின் பயனாளிகள் தங்களின் அனுபவங்களை, சக்சஸ் ஸ்டோரியை எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக நடத்துகிறோம்.

இன்னும் நிறைய சக்சஸ்புல் மனிதர்களை உருவாக்க வேண்டும். மகளிர் மாதிரியே, கல்லூரி செல்லும் மாணவர்கள், தங்களின் செலவைத் தாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லும் அளவிற்கு, அவர்களுக்கு துணையாக இருக்கும், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் பயன்பெறுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, பசியுடன் பள்ளிக்கு வந்துகொண்டிருந்த பிள்ளைகள் பலரும், இப்போது தினம் சூடாக, சுவையாக, சத்தாக காலை உணவு சாப்பிடும்போது, அவர்களின் அப்பா அம்மா நிச்சயம் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை நினைத்துப் பார்ப்பார்கள். ‘நான் முதல்வன்’ திட்டத்தில் படித்து, நல்ல வேலைக்கு செல்லும் இளைஞர்கள் எல்லாம் நம்முடைய திராவிட மாடலுக்கு நன்றி சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் யார் கையையும் எதிர்பார்க்காமல், விடியல் பயணம் திட்டத்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் கோடிக்கணக்கான மகளிர், “இதுதான் எங்களுக்கான அரசு பஸ்” என்று பெருமைப்படுகிறார்கள்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், வீட்டிற்கே வந்து மாத்திரை மருந்து வழங்கி பார்த்துக்கொள்வதால் நலமாக இருக்கும் 2 கோடியே 53 லட்சத்து 49 ஆயிரத்து 475 பேரும், நம்முடைய திராவிட மாடல் அரசு எப்படி கேர் எடுத்து பார்த்துக்கொள்கிறது என்று பாராட்டுவார்கள். இப்படி நம்முடைய திராவிட மாடல் அரசில், பட்டியலிட்டு, ஒவ்வொரு துறையிலும் சாதனைகளை “புத்தகம்”ஆகப் போடும் அளவிற்கு, தினமும் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

அதனால்தான் பொருளாதார வளர்ச்சியில், தமிழ்நாடு இந்தியாவிலேயே நம்பர் ஒன். ஒன்றிய அரசு வெளியிடும் பல சர்வே அறிக்கையிலும் எல்லாவற்றிவற்றிலும் நம்முடைய தமிழ்நாடுதான், டாப். இந்த திட்டங்கள் எல்லாவற்றை பற்றியும், நீங்கள் விரல்நுனியில் வைத்துக்கொள்ள வேண்டும். இது எல்லாவற்றையும் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். மற்ற கட்சிகள் எல்லோரும்தான் பிரசாரம் செய்வார்கள். ஆனால், அதிலிருந்து தனித்து தெரிவது போன்று உங்களுக்கு என்று ஒரு ஸ்டைல் இருக்க வேண்டும்.

வழக்கமாகத் தி.மு.க.,வுக்கு வாக்களிக்காதவர்கள் கூட, “இளைஞரணியின் கேம்பெய்னால்தான், தி.மு.க.வுக்கு வாக்களிக்கப் போகிறேன்” என்று சொல்ல வேண்டும். அப்படியொரு தாக்கத்தை நீங்கள் உருவாக்க வேண்டும். தேர்தல் நெருங்கி வந்துவிட்டது. மக்களிடம் நீங்கள் சொல்லுங்கள். பத்தாண்டுகளில், தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளிய அ.தி.மு.க.வினர் தாங்கள் ஏதோ உத்தமர்கள் போல் வேஷம் போட்டுக்கொண்டு வந்து வாக்கு கேட்பார்கள்.

அதேபோல், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வதை மட்டுமே வழக்கமாக வைத்திருக்கும் பா.ஜ.க.வினர், வழக்கம்போல் தங்களின் பொய்ப் பரப்புரைகளையும் பதற்றத்தை உண்டாக்கும் அரசியலையும் வைத்து, தேர்தலை சந்திக்கலாம் என்று வருவார்கள். இவர்களிடம் கைகட்டி, வாய் பொத்தி, அடிமை சேவகம் செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளை தமிழர்களின் சுயமரியாதையை அடகு வைக்கலாம் என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்யப் பல கூட்டங்கள் இருக்கிறது.

2026 தேர்தலில், மக்கள் முன்னால் இருக்கும் கேள்வி என்ன என்றால், “இன்னும் ஐம்பது ஆண்டுகள் முன்னோக்கி நடைபோட போகிறோமா? இல்லை. ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுக்க முயற்சி செய்பவர்களுக்கு அடிபணியப் போகிறோமா?” அந்தக் கேள்விக்கு மக்கள் அளிக்கப் போகும் விடை, “திராவிட மாடல் ஆட்சி 2.0” அதற்கு நீங்கள் எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஏன் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தில்தான், தமிழ்நாட்டின் எதிர்காலம், தமிழினத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. அந்த எதிர்காலம், வளம் நிறைந்ததாக, ஒளி நிறைந்ததாக தமிழ்நாடு நம்பர் ஒன் என்று சிங்கநடை போடுவதாக அமைய வேண்டும். நீங்கள்தான் திராவிட மாடல் 2.0 அடித்தளமாக, இருக்க வேண்டும். இருப்பீர்களா? இப்போது சொல்லுங்கள். நமது மிஷன் 2026 என்ன? “திராவிட மாடல் 2.0” சத்தமாகச் சொல்லுங்கள். திராவிட மாடல் 2.0 அந்த வெற்றிக்கான பயணத்தை, இன்றைக்கே தொடங்குங்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* வெள்ளி சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்த முதல்வர் இளைஞர்கள் ஆரவாரம்
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி சிம்மாசனத்தை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நினைவு பரிசாக வழங்கினார். அதில் கால்மீது கால்போட்டு கம்பீரமாக முதல்வர் அமர்ந்தார். இந்த காட்சியை பார்த்து அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் மகிழ்ச்சியில் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். அதேபோல் திமுக இளைஞர் அணி சார்பில் நினைவு பரிசை முதல்வருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி வாள், கேடயத்தை நினைவு பரிசாக அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

* பொய்யை பேசுவதற்கு ஒருவர் தயங்காதபோது, உண்மையைப் பேசுவதற்கு நெஞ்சில் உரமிருக்கும் நாம் ஏன் தயங்க வேண்டும்.

* ஒவ்வொரு தலைமுறைக்கு முன்பும் வரலாறு ஒரு கடினமான கேள்வியை முன்வைக்கும். அதற்கு ரியாக்ட் செய்ய முடியாமல், மண்டியிடுகின்றவர்களை, வரலாறும் மறந்துவிடும். மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.

* 17 கட்டுப்பாடுகள் தடையின்மை சான்று பெற்று நிகழ்ச்சி
திருவண்ணாமலையில் நேற்று நடந்த வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் 13 மாவட்டங்களை சேர்ந்த 1.30 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் வெள்ளை நிற சீருடையுடன் கலந்து கொண்டனர். அதற்காக, திருவண்ணாமலை கலைஞர் திடலில் 150 ஏக்கர் பரப்பளவில் கூட்ட ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தன.

இந்த கூட்டத்துக்கு காவல் துறை விதித்த 17 கட்டுப்பாடுகள் முறையாக நிறைவேற்றப்பட்டு, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை, மின்துறை, உணவு பாதுகாப்புத்துறை, மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளிடம் தடையின்மை சான்று பெற்று நிகழ்ச்சி நடந்தது.

* 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்
நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்களுக்கு உதவி செய்ய 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும், 500 தற்காலிக கழிப்பறைகள், 150 டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுடன் 2 மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டன. தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

* போக்குவரத்து நெரிசல் தவிர்க்க ஏற்பாடு
திருவண்ணாமலை நகரில் பொதுமக்களுக்கு எந்தவித போக்குவரத்து நெரிசலும், பிரச்னையும் ஏற்பட கூடாது என்பதற்காக, நகருக்கு வெளியே 5 கி.மீ. தொலைவில் இடம் தேர்வு செய்யப்பட்டது. மேலும், நிகழ்ச்சி நடந்த கலைஞர் திடலில் இருந்து பிரதான சாலைகளை இணைக்கும் வகையில் வாணியந்தாங்கல், மலப்பாம்பாடி, வள்ளிவாகை ஆகிய 3 வழித்தடங்கள் இருவழி சாலைகளாக சீரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* பட்டொளி வீசிய இருவண்ண கொடிகள்
நிகழ்ச்சி நடந்த கலைஞர் திடல், மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்தது. மேலும், நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வருகை வந்த சாலையின் இருபுறமும் திமுக இருவண்ண கொடிகள் பட்டொளி வீசி பறந்தன. மேலும், வாழை மரங்கள், செங்கரும்பு ஆகியவற்றால் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு, எழில்மிகு காட்சியளித்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் வந்த வாகனங்கள் நிறுத்துவதற்கு தனித்தனியே பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது.

* ‘உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ் என்று புலம்புகிறார்கள்’
‘நாங்கள் சந்திக்காத சோதனைகள் இல்லை, துன்பங்கள் இல்லை, துரோகங்கள் இல்லை. அத்தனையையும் தாண்டி, கழகத்தின் லட்சியப் பயணத்திற்குத் துணை நின்றது நாங்கள் வளர்த்த இளைஞரணி. இப்போது அந்த பணியைத் தம்பி உதயநிதியிடமும், உங்களிடமும் ஒப்படைத்திருக்கிறோம். அவரும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர் புல்லாகச் செயல்படுகிறார்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இறங்கி அடிக்கிறார். கொள்கை எதிரிகள், “உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்” என்று புலம்புகிறார்கள். அந்த அளவிற்குக் கொள்கையில் ஸ்ட்ராங்காக இருக்கிறார். கழகத்திற்கு எது தேவை என்று, உணர்ந்து செயல்படுகிறார் உதயநிதி. இதுதான், ஒரு பொலிட்டிஷியனுக்கான குவாலிட்டி.’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* ‘எங்க கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்களே’
* இந்தியாவிலேயே பி.ஜே.பி.,க்கு எதிராக ஐடியாலஜிக்கல் பைட் (கருத்தியல் போர்) செய்துகொண்டு இருக்கும் ஒரே மாநிலக் கட்சி, தி.மு.க.,தான். அவர்களால் வெற்றி கொள்ள முடியாதது, நம் தமிழ்நாட்டை மட்டும்தான்.

* உங்கள் சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும், உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இது தமிழ்நாடு. இது தமிழ்நாடு.

* எங்களின் கேரக்டரையே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே, அன்புடன் வந்தால், அரவணைப்போம், ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம், எதிர்த்து நிற்போம்.

இளம் பெரியார் உதயநிதி ஸ்டாலின்: அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்
இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: நாட்டு மக்களின் நம்பிக்கையானவர், மக்களுக்கு நன்மை செய்பவர், மக்களிடம் அன்பு கொண்டவர், உண்மை தொண்டர்களுக்கு ஊன்றுகோலாக திகழ்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதோடு, திமுக கட்டுக்கோப்பாக திகழ காரணமாக இருப்பவர், ஏழைகளின் ஏந்தலாக திகழ்பவர், தமிழ்நாடுக்கு தாயாகவும், தாயுமானவராகவும் இருக்கிறவர் முதல்வர்.

நாளைய தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம், திமுகவின் நங்கூரம் உதயநிதி ஸ்டாலின். ஒற்றை செங்கல் கொண்டு ஊரை திரட்டியவர், அதையே வேட்பாளர்களுக்கு வெற்றியாக மாற்றியவர் உதயநிதி ஸ்டாலின். தினந்தோறும் கடமைகளை நிறைவேற்றுகிறவர். சூறாவளி சுற்றுப்பயணத்தால் அனைவரையும் தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக்குகிறவர். நாட்டின் தேவையறிந்து செயல்படுகிற உதயநிதி எங்கள் இதயநிதி. அவர் வழியில் நாம் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபடுவோம்.

இந்த ஆண்டு தனது பிறந்த நாளில் தந்தை பெரியார் எண்ணிய, அவர் உடுத்திய கருப்பு ஆடையை உதயநிதி ஸ்டாலின் உடுத்தி கொண்டாடினார். அதைப் பார்த்து நாங்கள் எல்லாம் பூரித்து போனோம். இந்த இயக்கத்தின் முதல் தலைமுறை தலைவர் பெரியார். இரண்டாம் தலைமுறை தலைவர் அண்ணா. மூன்றாம் தலைமுறை தலைவர் என் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிற கலைஞர்.

நான்காம் தலைமுறை தலைவர் திராவிட மாடல் ஆட்சியை நடத்திவரும், முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர்களது வழியில் ஐந்தாம் தலைமுறை தலைவராக இன்னும் 50 ஆண்டுகாலத்துக்கு, இந்த இயக்கத்தை கொண்டு செல்லக்கூடியவர் உதயநிதி ஸ்டாலின். எங்களுக்கு இளம் பெரியாராக உதயநிதி ஸ்டாலினை அளித்ததற்காக முதல்வருக்கு கோடானு கோடி நன்றிகளை தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

* ராணுவ கட்டுக்கோப்புடன் திரண்டனர்: நேர்த்தியாக இளைஞர்களை ஒருங்கிணைத்த நிர்வாகிகள்
திருவண்ணாமலை வாணியந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் திடலில், வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நேற்று நடந்தது. அதில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 91 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்தியாவில் வேறு எந்த அரசியல் இயக்கத்துக்கும் இல்லாத இளைஞர் கட்டமைப்பு திமுகவில் மட்டுமே உள்ளது என்பதை உலக்கு உணர்த்தும் நிகழ்ச்சியாக வடக்கு மணடல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி அமைந்தது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கான திடல் முழுவதும் வெள்ளை நிற சீருடையில் அணி திரண்ட லட்சக்கணக்கான இளைஞர் படையால் நிரம்பி வழிந்தது.

1 லட்சத்து 30 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்ட இவ்வளவு பெரிய கூட்டம் நடந்தும், இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி கூட்டம் நேர்த்தியாக ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருந்தது. இளைஞர்களுக்கு ஸ்ேநக்ஸ், குடிநீர் பாட்டில், பிரியாணி பொட்டலம் போன்றவற்றை அந்தந்த இருக்கைகளிலேயே தயாராக வைத்திருந்தனர். இதனால் எவ்வித குறைபாடும் இல்லாமல் வெற்றிகரமாக இந்த கூட்டத்தை ஒழுங்குநெறியுடன் வழிநடத்தினர்.

ராணுவ கட்டுப்பாட்டுடன் இளைஞர்கள் பங்கேற்றதும், அவர்களுக்கான இருக்கைகளில் அமர்ந்து நிகழ்ச்சி முடியும் வரை பொறுப்போடும், பொறுமையோடும் செயலாற்றியதும் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. போக்குவரத்து நெரிசலும் இல்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தை ஒரே இடத்தில் திரளச்செய்து ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தியது 75 ஆண்டு பாரம்பரியமும், பழமையும் வாய்ந்த இயக்கத்தின் அனுபவம் அடிப்படையாக அமைந்தது என்று கூட்டத்தை பார்த்தவர்கள் வியந்து பாராட்டினர்.

* அனைவரையும் கவர்ந்த புகைப்பட கண்காட்சி
வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்ற கலைஞர் திடலில், திமுகவின் 75 ஆண்டுகால வரலாற்றை விவரிக்கும் சிறப்பு மிக்க வரலாற்று புகைப்பட கண்காட்சி, திமுக முன்னோடிகளின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் அடங்கிய புகைப்பட கண்காட்சி, திமுக இளைஞர் அணி கடந்து வந்த 45 ஆண்டு கால பயணத்தை விளக்கும் புகைப்படங்கள், முத்தமிழறிஞர் பதிப்பக அரங்கம் ஆகியவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது.

திமுகவின் வரலாறும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் தியாகங்களையும் மெய் சிலிர்க்க வைக்கும் புகைப்படங்களாக அதில் இடம் பெற்றிருந்தது இளைஞர்களின் உள்ளத்தை உருக்குவதாக அமைந்தது.

Tags : Amitshah ,K. Stalin ,Dizuka Youth Encounter Show ,Thiruvannamalai ,Union Minister ,Amitsha ,Dimuka Youth Meeting ,Tiruvannamalai ,Vaniyandangal ,
× RELATED உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டி:...