×

விதிமீறி ஜாமீன் வழங்கிய 2 நீதிபதிக்கு ஏழு நாள் சிறப்பு பயிற்சி: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் ரூ.6 கோடி மோசடி செய்ததாக தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர்கள், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆனால் இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி, டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அந்த தம்பதிக்கு ஜாமீன் வழங்கினார். இதையடுத்து இந்த ஜாமீனை கர்கர்டூமா செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியும் உறுதி செய்தார்.

இதையடுத்து மேற்கண்ட விவகாரத்தை கையிலெடுத்த உச்ச நீதிமன்றம், கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் செயல்பாடுகள் நீதித்துறை மரபுகளை மீறிய செயல் எனக்கூறி, முன்னதாக வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது. மேலும், இந்த வழக்கில் சட்டவிரோதமாகவும், தவறான முறையிலும் ஜாமீன் வழங்கிய பெருநகர மாஜிஸ்திரேட் நீதிபதி மற்றும் அந்த ஜாமீனை உறுதி செய்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஆகிய இருவருக்கும் சிறப்பு நீதித்துறை சுமார் ஏழு நாட்கள் பயிற்சி அளிக்க வேண்டும். அதில், ‘‘நீதிமன்ற நடவடிக்கைகளை எவ்வாறு சரியாக நடத்துவது.

உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு எவ்வாறு மதிப்பளிப்பது ஆகிய அனைத்தும் அடங்கி இருக்க வேண்டும். இதைத்தவிர மோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற தம்பதி உடனடியாக சரணடைய வேண்டும். மேலும் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், ‘‘ நீதித்துறை பொறுப்புடைமையை உறுதி செய்யவும், கீழ் நீதிமன்றங்கள் சட்டக் கோட்பாடுகளையும், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags : Supreme Court ,New Delhi ,Delhi ,Delhi High Court ,Supreme Court… ,
× RELATED 2014, 2019, 2024 தேர்தல்களில் முக்கிய...