உடன்குடி, டிச.24: வருகிற 28ம்தேதி திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வருவதையொட்டி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: 2021ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்புக் குழுவை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையிலான குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சியினர், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்து வருகிறது.
4ம் கட்ட சுற்றுப்பயணமாக வருகிற 28ம்தேதி குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகின்றனர். அன்றையதினம் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில், தெற்கு மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர், வைகுண்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த நிர்வாகிகள், விவசாய அமைப்பை சார்ந்தவர்கள், தொழிலாளர் அமைப்பை சார்ந்தவர்கள், வர்த்தக அமைப்பை சார்ந்தவர்கள், தொழில் முனைவோர், இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரிடம் எழுத்து பூர்வமாக வழங்க கேட்டுக் கொள்கிறேன்.