×

ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து வால்பாறைக்கு செல்ல நவம்பர் 1 முதல் இ-பாஸ்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஊட்டி, கொடைக்கானலைப் போல் வால்பாறையில் நவம்பர் 1ம் தேதி முதல் இ பாஸ் நடைமுறையை அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து உயர் நீதிமன்ற உத்தரவின்படி சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். குழுவின் இடைக்கால அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த அறிக்கையில், ‘ஊட்டிக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அரசு போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். வரும் டிசம்பர் மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஐ.ஐ.டி-ஐ.ஐ.எம். குழுவினருக்கு தேவையான தகவல்களையும், ஆலோசனைகளையும் வழங்குவதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் விரைவில் கூட்டம் கூட்ட வேண்டும் என்று அரசுத்தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது, ஊட்டி, கொடைக்கானலில் இ பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வால்பாறையில் குவிந்து வருவதாக நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானலை விட, வால்பாறை, டாப் சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியன சுற்றுச்சூழல் ரீதியாக தீவிரமான பகுதிகள். அதனால், வால்பாறை செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து, இ-பாஸ் வழங்கும் நடைமுறையை நவம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும். வால்பாறை செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்தும் சோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 31ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Ooty, Kodaikanal ,Valparai ,Madras High Court ,Chennai ,Tamil Nadu government ,Ooty ,Kodaikanal ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்