சென்னை: டெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில்(டெட்) தேர்ச்சி பெற வேண்டும். டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5ம் வகுப்பு வரையும், 2ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த தகுதியுடையவர்கள். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி நடப்பாண்டுக்கான டெட் தேர்வு நவம்பர் 15, 16ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 11ல் தொடங்கி செப்டம்பர் 10ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இத்தேர்வெழுத 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே, பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது நடைபெற உள்ள டெட் தேர்வை எழுதுவதற்கு ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (செப்டம்பர் 13) நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
