×

தமிழகம் திராவிட கலாசார பூமி நடிகர்கள் ரஜினி, கமல் இணைந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படாது முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி

திருவண்ணாமலை, டிச.18: தமிழக அரசியலில் நடிகர்கள் ரஜினி, கமல் இணைந்தாலும், அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படாது என முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் தெரிவித்தார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், மாநில வளர்ச்சி திட்டக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில திட்டக்குழு துணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் தலைமை தாங்கினார். டிஆர்ஓ ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் நிறைவேற்றப்படும் அரசு திட்டப் பணிகளின் முன்னேற்றம், நிதி தேவை, அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடந்தது. அதைத்தொடர்ந்து, மாநில வளர்ச்சி திட்டக்குழு துணைத்தலைவர் சி.பொன்னையன் அளித்த பேட்டி: மக்களின் தேவைகளை அறிந்து அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு, மாநில வளர்ச்சி திட்டக்குழு நிதியை ஒதுக்குகிறது. அந்த நிதியை பயன்படுத்தி 42 அரசு துறைகளின் மூலம் திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. எனவே, அரசின் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா, அவற்றின் முன்னேற்றம், கூடுதல் நிதி தேவைப்படுகிறதா என மாநில வளர்ச்சி திட்டக்குழு நேரடி ஆய்வு நடத்துகிறது.

மேலும், பரிசோதனை முயற்சியாக அறிவிக்கப்படும் திட்டங்களில் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறதா எனவும் ஆய்வு செய்கிறோம். நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, நிதி பற்றாக்குறை உள்ளது. குடிசை தொழில், சிறு தொழில், சுய உதவிக்குழுக்கள் செய்யும் தொழில்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க முன்வந்துள்ளது. எந்தெந்த தொழில்களை மேற்கொண்டால் வாழ்வாதாரம் மேம்படும், உற்பத்தியாகும் பொருட்களுக்கு விற்பனை வாய்ப்பு கிடைக்கும் என கண்டுபிடித்து, அதற்கான நிதியை வங்கிகள் மூலம் பெற்று சுய வேலை வாய்ப்பை உருவாக்குவது அரசின் நோக்கம். எனவே, சுய உதவிக்குழுக்கள் அதிகம் உருவாக்க வேண்டும். அதிகமான பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில்தான் உள்ளது. எனவே, படித்த இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம். கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இதுபோன்ற திட்டங்களுக்கு மாநில வளர்ச்சி திட்டக்குழு துணை நிற்கிறது.

அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினி கடந்த 20 ஆண்டுகளாக சொல்லி வருகிறார். அவரிடம் இருந்த ரசிகர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் சேர்ந்துள்ளனர். எந்த கணிப்பில் அவர் அரசியலுக்கு வருகிறார் என்பது அவருக்குதான் தெரியும்.
நடிகர்கள் கமல், ரஜினி சேர்ந்தாலும் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படாது. தமிழகத்தின் மண் வாசனையை பொறுத்தவரை, இது திராவிட கலாச்சார பூமி. பெரியார், அண்ணா காலத்தில் இருந்து திராவிட இயக்க கட்சி தலைவர்களால் இந்த உணர்வு வளர்க்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் தந்த தனித்தன்மை வாய்ந்த மொழி தமிழ். வடமொழி தாக்குதலை, சமஸ்கிருத தாக்குதலை எந்த காலத்திலும் தமிழ் மொழி ஏற்காது. இந்த தமிழ் பூமிக்குரிய, மண் வாசனைக்கு ஏற்ற அரசியல்தான் இங்கு முடியுமே தவிர, மற்ற அரசியல் இங்கு வர முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : AIADMK ,actors ,Ponnaiyan ,Tamil Nadu Dravida Cultural Bhoomi ,Rajini ,Kamal ,
× RELATED நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி