நாகர்கோவில், டிச.17: குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பாதிப்பினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் நலிந்து வேதனை அடைந்துள்ள சமயத்தில் மக்களின் அன்றாடம் தேவையான சமையல் செய்வதற்கான காஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. இந்த மாதத்தில் இரண்டு முறை காஸ் சிலிண்டர் விலை உயர்த்தி கூடுதலாக மீண்டும் ரூ.50 என்ற அறிவிப்பு கண்டு பொதுமக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து மாதத்திற்கு 4 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அதனால் விலைவாசியும் உயருகிறது. காய்கறி, மளிகை பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. அத்துடன் தற்போது காஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்ததால் ஏழை நடுத்தர மக்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏழை தாயின் மகன் என்று பிரதமர் மோடியும், நான் ஒரு விவசாயி என்று முதல்வர் எடப்பாடியும் மக்கள் மத்தியில் தங்களை விளம்பரப்படுத்தி ஏழைக்கு வாழ்வளிக்காமல், ஏற்றத்திற்கு வழிவகுக்காமல் வஞ்சிக்கின்ற மத்திய மாநில அரசுகளுக்கு குமரி மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.