×

இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு பதியகோரி போலீஸ் ஸ்டேசனை விசிக.,வினர் முற்றுகை

காடையாம்பட்டி, டிச.16: காடையாம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் சாமுராய்குரு தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், நேற்று போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடம் (பொ) மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பாப்பிசெட்டிப்பட்டியில் சுமார் 100 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இந்த பகுதியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டிருந்த போது, அங்கு வந்த இந்து முன்னணியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர், அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி தகராறில் ஈடுபட்டார். மேலும், அவரை அங்கிருந்தவர்கள் தாக்கியதாக பொய் புகார் கொடுத்து, இச்சம்பவத்திற்கு தொடர்பில்லாத 4 பேரை போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்தில் தகராறு செய்த இந்து முன்னணி நிர்வாகி மீது எந்த வழக்கும் பதியவில்லை. எனவே, அவர்மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர் சாமுராய்குரு கூறுகையில், ‘இந்து முன்னணி நிர்வாகி தாக்குதல் நடத்தும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்,’ என்றார்.

Tags : Vizika ,police station ,executive ,Hindu Front ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...