மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யத்தொடங்கி உள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அருவிகளில் குளிக்கவும் பரிசல் சவாரிக்கும் தடை விதித்து, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 9,828 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 29,360 கன அடியாக அதிகரித்தது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையிலிருந்து, பாசனத்திற்கு 23,300 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 118.86அடியாகவும், நீர் இருப்பு 91.66 டிஎம்சியாக உள்ளது.
