சென்னை: நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதல்வர் கலந்து கொள்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினால் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ள ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் மற்றும் ஊடகச் செயலாளர் பி.அமுதா, சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. 2022 செப்டம்பர் 15ம் தேதி மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக, பல்வேறு கட்டமாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 4வது கட்டமாக ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, 2024 ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழகத்தில் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 23, 536 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள்.
தற்போது வரை முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் 34,987 தொடக்கப்பள்ளிகளில் மொத்தம் 17 லட்சத்து 53 ஆயிரம் மாணவ – மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்பட்டுள்ளது. 90 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் முந்தைய பாடங்களை நினைவு கூர்வது அதிகரிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. மேலும் மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதால் ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்கள் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டின் காலை உணவு திட்டத்தை கனடா அரசும் தங்கள் நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்று 2025 மார்ச் 14 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, 5வது கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். இந்த விரிவாக்க திட்டத்தின் மூலம் நகர்ப்புறத்தில் உள்ள 2,429 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 3.06 லட்சம் மாணவ-மாணவிகள் தினமும் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர். தமிழ்நாட்டின் காலை உணவு திட்டத்தை கனடா அரசும் தங்கள் நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
* பள்ளிக்கு மாணவர்கள் வருகை அதிகரிப்பு
காலை உணவு திட்டத்தினால் பள்ளி மாணவ – மாணவிகள் எப்படி பயன்பெறுகிறார்கள் என்று மாநில திட்டக் குழு விரிவான ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் ஊரக நகர்ப்புற பகுதிகளில் உள்ள 100 பள்ளிகளும், 5274 பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். இந்த ஆய்வின் முக்கிய முடிவுகள் விவரம் வருமாறு:
* பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை விகிதம் பாலினம் மற்றும் வாழ்விடம் பாகுபாடின்றி குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.
* தாமதமாக காலை 9 மணிக்கு பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை சமூக -பொருளாதார பாகுபாடின்றி குறைந்துள்ளது.
* மாணவர்கள் நோய்வாய்ப்படுவதும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும் குறைந்துள்ளது.
* வகுப்பறை செயல்பாடுகளில் ஆர்வமுடன் ஈடுபடுவதும், கற்றல் திறனில் மேம்பாடும், கல்வி இணைச் செயல்பாடுகளில் பங்கேற்பதும், விளையாட்டுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வதும் அதிகரித்துள்ளது.
* ஆசிரியரின் குறிப்புரைகளை பின்பற்றுதல், கவனம் செலுத்துதல்,எழுத்துப்பணி முடித்தல் ஆகியவற்றில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
* சுமார் 80% மாணவர்களிடம் வகுப்பில் முந்தைய பாடங்களை நினைவு கூறும் திறன் காணப்படுகிறது.
* மாணவர்களின் எழுத்து, வாசிப்பு மற்றும் பேச்சு திறன்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
* இந்த திட்டம் கிராமப்புற குடும்பங்களுக்கு, குறிப்பாக பெற்றோர்கள் சீக்கிரமே வேலைக்கு செல்லும் குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
* பிள்ளைகள் காலை உணவை உண்ணவில்லையே என்று கவலைப்பட்ட தாய்மார்கள், தற்போது தங்கள் பிள்ளைகள் காலை உணவு சாப்பிடுவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
* தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு, உதவிபெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் தற்போது மாணவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. பொங்கல் வகைகள், கிச்சடி, உப்புமா, அரிசி, ரவை, சேமியா, கோதுமை இவையெல்லாம் வைத்து ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வகையான உணவு வழங்கப்படுகிறது. அந்த உணவுடன் காய்கறி உணவும் வழங்கப்படுகிறது. காலை உணவு திட்டத்தில் சாப்பிடும் குழந்தைகள் நல்ல பழக்கங்களை பழகியுள்ளனர். கை கழுவும் பழக்கம் குழந்தைகளிடம் வந்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் மைய சமையல் அறையில் சமைத்து, வேன்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பேரூராட்சி, ஊரக பகுதிகளில் மகளிர் உதவிக் குழுவினர் மூலம் சாப்பாடு தயார் செய்யப்படுகிறது. எந்த குழந்தைகள் அந்த பள்ளியில் படிக்கிறார்களோ, அவர்களின் தாயாரும் அந்த குழுவில் சமைக்கிறார்கள். இதனால் தரமாக உணவு சமைக்க முடிகிறது. இதுவரை 4 கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டத்தில் 34,987 பள்ளிகள் மூலம் 17,53,257 மாணவ-மாணவிகள் உணவு சாப்பிடுகிறார்கள். 5வது கட்டமாக இந்த திட்டத்தை முதல்வர் சென்னையில் இன்று நகர்ப்புறங்களில் விரிவாக்கம் செய்து வைக்கிறார். மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள்.
இதன்மூலம் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் முழுவதற்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்வது குறித்து அரசுதான் முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவால் மாணவர்கள் ஆரோக்கியம் பெற்றுள்ளனர். சராசரியாக 88 சதவீதம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் சாப்பிடுகிறார்கள். காலை உணவு திட்டத்தை தாய்மார்கள் வரவேற்றுள்ளதாக வருவாய் துறை செயலாளர் அமுதா கூறினார்.
