சென்னை: தமிழகத்தில் 2019ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 6 கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி வருமான வரி விலக்கு, அங்கீகாரம், பொது தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள், நட்சத்திர பிரசார நியமனம் ஆகிய சலுகைகளை பெறும்.
மேலும், பதிவு செய்யப்பட்ட கட்சி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்களில் வேட்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும். இதில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் வரம்பிற்கு உட்பட்ட முகவரியில் உள்ள கீழ்க்கண்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோகுல மக்கள் கட்சி, இந்தியன் லவ்வர்ஸ் பார்ட்டி, இந்தியன் மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட 6 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த கட்சிகள் கடந்த 2019ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக எந்த ஒரு தேர்தலிலும் வேட்பாளர்களை போட்டியிட நியமிக்கவில்லை என்பதற்காக இந்த தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணை செய்து அறிக்கை அனுப்பி வைக்க தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே, மேற்குறிப்பிட்டுள்ள கட்சிகளுக்கு சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலர், தங்கள் கட்சியின் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தை தலைமை தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் 26ம் தேதி (இன்றைக்குள்) நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக அளிக்க காரணம் கேட்கும் நோட்டீஸ் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
