சென்னை: குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 645 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக கால அவகாசம் நாளை மறுநாளுடன் முடிகிறது. இதனால் பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2\\”ஏ\\” பணியில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 15ம் தேதி வெளியிட்டது. இதில் குரூப் 2 பணியில் உதவி ஆய்வாளர் 6 இடங்கள், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்(மாற்று திறனாளி அல்லாதர்)-1, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்(மாற்று திறனாளிகள்) 1, நன்னடத்தை அலுவலர்-5, சார் பதிவாளர்(கிரேடு 2)- 6, வனவர் 22 இடங்கள் என மொத்தம் 50 இடங்கள் நிரப்பப்படுகிறது.
குரூப் 2ஏ பதவியில் பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டு துறை முதுநிலை ஆய்வாளர் 65 இடம், இந்து சமய அறநிலையத்துறையில் தணிக்கை ஆய்வாளர் 11, வணிக வரித்துறையில் உதவியாளர் 13, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் 40 என 31 துறையில் 595 இடங்கள் நிரப்பப்படுகிறது. குரூப் 2, 2ஏ தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்ட அன்றே இணையதளம் www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் ஏதாவது இளங்கலை படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இத்தேர்வுக்கு இளங்கலை பட்டதாரிகள் மட்டுமின்றி, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினீயர் என்று போட்டு போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை மறுநாளுடன்(13ம் தேதி) முடிவடைய உள்ளது. இதனால் இன்று, நாளை, நாளை மறுநாள் என விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால், விரிவான ஏற்பாடுகளை டிஎன்பிஎஸ்சி செய்துள்ளது. விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள ஆகஸ்ட் 18ம் தேதி முதல் முற்பகல் 12.01 மணி முதல் ஆகஸ்ட் 20ம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் வரை காத்திருக்காமல் தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பிக்க தேர்வாணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இத்தேர்வுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். முதல்நிலை தேர்வில் பொது அறிவு பகுதியில் இருந்து 100 வினாக்கள்(பட்டப்படிப்பு தரம்), பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் இருந்து 100 வினாக்கள்(10ம் வகுப்பு தரம்) என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண் வழங்கப்படும். இதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
