×

10 ஆண்டாக பேசாததால் ஆத்திரம் மனைவி வாயில் ஆசிட் ஊற்றிய கணவர் கைது

 

மாதவரம், ஆக.5: அயனாவரம் நாராயணன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (44), பெயின்டர். இவரது மனைவி டெய்சி ராணி (39). இவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சீனிவாசனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், ஒரே வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பேசாமல் வாழ்ந்து வருகின்றனர்.
அவ்வப்போது சீனிவாசன் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போதும், டெய்சி ராணி கணவரிடம் பேசாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி காலை சீனிவாசன் தனது மனைவி டெய்சி ராணியிடம் தகராறு செய்து, வீட்டின் கழிவறையில் இருந்த ஆசிட்டை கொண்டுவந்து டெய்சி ராணி வாயில் ஊற்றியுள்ளார்.
இதில் முகத்தில் ஆசிட் பட்டு டெய்சி ராணி படுகாயமடைந்தார். அவரை, மகன்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று திரும்பிய அவர், இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார், பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Madhavaram ,Srinivasan ,Narayanan Street, Ayanavaram ,Daisy Rani ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...