புது படங்கள் ரிலீஸின் போது பொது அமைதியை காக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை பற்றி வழிகாட்டு விதிகள் பிறப்பிப்பு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: புது படங்கள் வெளியாகும் போது பொது அமைதியை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விதிமுறைகள் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ரசிகர்கள் சிறப்பு காட்சிகளில் விதிகளை வகுத்து முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, முன்னாடி நடிகர்களின் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் சிறப்பு காட்சி நடத்தப்படுகிறது. அப்போது திரையரங்கு முன்பு 24 மணி நேரமும் பட்டாசு வெடிப்பது, கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வது என பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துவதாகவும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துவதால் காட்சிகளை முறைப்படுத்துவதற்கான விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் ஆஜராகி இருந்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, புதிய திரைப்படங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் போது பொது அமைதியை பேணவும், சட்டம் – ஒழுங்கை பராமரிக்கவும் விதிகள் வகுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து இது சம்பந்தமாக உள்துறை செயலாளர் அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்தார்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ரசிகர் காட்சிகளால் எவ்வாறு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை மனுதாரர் தனது மனுவில் விளக்கவில்லை எனவும், அரசு உள்துறை செயலாளரின் கடிதத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

The post புது படங்கள் ரிலீஸின் போது பொது அமைதியை காக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை பற்றி வழிகாட்டு விதிகள் பிறப்பிப்பு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: