*விவசாயிகள் பயனடைய கலெக்டர் வேண்டுகோள்
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டில் சம்பா சாகுபடிக்கு கூட்டுறவுத்துறை மூலம் ரூ.180 கோடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பயனடை வேண்டும் என்று என்று மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கான நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணியை மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இவ்வாறு விட்டுவிட்டு மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் உரம், விதை, பூச்சி மருந்து ஆகியவை தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையே நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கு கூட்டுறத்துறை மூலம் ரூ.180 கோடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பயிர்க்கடன்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும். இதற்காக நடப்பு ஆண்டிற்கு ரூ.180 கோடி பயிர்க்கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே கடன் தேவைப்படும் விவசாயிகள் காலதாமதம் செய்யாமல் தங்களது சிட்டா அடங்கல் நகலுடன் தாங்கள் உறுப்பினராக உள்ள சங்கத்தில் கடன் கோரி மனு அளிக்க வேண்டும். பயிர்க்கடன் தனிநபர் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரையிலும் பெற முடியும். ஜாமீன் பேரில் அதிகபட்சமாக கடன் பெறலாம். நகை அடமானத்தின் பேரில் ரூ.3 லட்சம் வரையிலும் கடன்பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
ஏக்கர் ஒன்றுக்கு பயிர்க்கடன் ரொக்கமாக ரூ.28 ஆயிரத்து 550ம், பொருள் பகுதியாக ரூ.7 ஆயிரத்து 550ம் என மொத்தம் ரூ.36 ஆயிரத்து 100 வழங்கப்படும். பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே சாகுபடி செய்யும் தகுதியுடைய அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் கூட்டுறவுத்துறை மூலம் பயிர்க்கடன் வழங்கப்படும்.
மேலும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்கு தொகை மற்றும் நுழைவுக்கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் கடன் மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயன்பெறலாம்.
இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் நாகப்பட்டினம் மண்டல இணைப்பதிவாளரை 7338721201 என்ற செல்போன் எண்ணிலும், நாகப்பட்டினம் சரக துணைப்பதிவாளரை 9087946937 என்ற செல்போன் எண்ணிலும், துணைப்பதிவாளர் பணியாளர் அலுவலரை 9080015003 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா சாகுபடிக்கு ரூ.180 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு appeared first on Dinakaran.