ஆவடி மாநகராட்சி பகுதியில் ரூ.1.10 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்

ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதியில் ரூ.1.10 கோடியில் திட்டப் பணிகளை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். ஆவடி மாநகராட்சி பகுதியில், அமைச்சர் சா மு நாசர் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார். அந்த வகையில், தமிழகத்தில் முதன்முறையாக ஆவடி அரசு பொது மருத்துவமனையில், சி.எஸ்.ஆர் நிதி பெற்று ரூ.28 லட்சம் மதிப்பில், காசநோய் கண்டறியும் அதிநவீன கருவி ஆய்வகத்தை அமைச்சர் நாசர், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த கருவி மூலம், காசநோயை துல்லியமாக கண்டறிந்து, 2 மணி நேரத்தில் ஆய்வறிக்கையை பெற முடியும். தனியார் மருத்துவமனையில் இந்த பரிசோதனைக்கு 2,000 முதல் 3,000 ரூபாய் வரை செலவாகும். இதைத்தொடர்ந்து, ஆவடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் 5 சிந்தாமணி நியாய விலைக்கடை மற்றும் 2 அமுதம் நியாய விலைக்கடை, 6 மின் மாற்றிகளை அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, பொது மக்களிடம் கோரிக்கை மனுகளை பெற்ற அமைச்சர் சா.மு.நாசர், நியாயவிலை கடைகளில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பொருட்களும் சரியாக சென்றடைய வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆவடி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி, மாநகரச் செயலாளர் சண் பிரகாஷ், பகுதிச் செயலாளர்கள் பேபிசேகர் பொன்விஜயன், ராஜேந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

The post ஆவடி மாநகராட்சி பகுதியில் ரூ.1.10 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: