×

கிராமிய கலைஞர் கொலை வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை

 

மதுரை, ஏப். 25: கிராமிய கலைஞர் கொலை வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகேயுள்ள பாலூத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சீனி(65). கிராமிய கலைஞரான இவர், கடந்த 25.4.2022ல் கலை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு தனது குழுவினருடன் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார், வழியில், நாகமலை புதுக்கோட்டை ஆற்றுக்கால் அருகே வந்தபோது, எதிரே வந்த ஆட்டோ, சீனி குழுவினர் வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் (30) திருப்புளியை எடுத்து சீனியின் மார்பில் அடுத்தடுத்து குத்தினார்.இதில் பலத்த காயமடை ந்த சீனி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2.5.2022ல் உயிரிழந்தார்.

இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த நாகமலை புதுக்கோட்டை போலீசார், ஆட்டோ டிரைவர் வெங்கடேசனை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசுத் தரப்பில் வக்கீல் பி.அழகன் ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ஜெ.ராதிகா நேற்று தீர்ப்பளித்தார். அதில், ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் மீதான கொலைக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்தார். இதையடுத்து வெங்கடேசன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post கிராமிய கலைஞர் கொலை வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...