கனரக லாரி வீட்டின் மீது கவிழ்ந்ததால் பரபரப்பு: 3 பேர் உயிர் தப்பினர்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஜல்லி ஏற்றி சென்ற கனரக லாரி நிலைத்தடுமாறி வீட்டில் மீது கவிழ்ந்ததில் 3 பேர் உயிர் தப்பினர். கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு ஊராட்சி தாணிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் (47), கூலி தொழிலாளியான இவர் மனைவி லோகி (38), இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் மகள் பிரியதர்ஷினி (19) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை மூவரும் வீட்டிற்கு வெளியே அமர்ந்து கொண்டிருந்த போது அந்த வழியாக மாதர்பாக்கத்தில் இருந்து கவரப்பேட்டை நோக்கி ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த கனரக லாரி நிலைதடுமாறி வீட்டின் ஒரு பகுதி மீது மோதி கவிழ்ந்தது.

லாரி சாய்வதை கண்டதும் முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இந்த விபத்தில் முருகனின் வீடு முழுவதும் சேதம் அடைந்ததோடு, வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்தன.விபத்து குறித்து அறிந்து அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான மேல்முதலம்பேட்டை சேர்ந்த லாரி டிரைவர் கிரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கனரக லாரி வீட்டின் மீது கவிழ்ந்ததால் பரபரப்பு: 3 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: