ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக புகார் அளிக்க உள்ளேன்: ராகுல் காந்தி

டெல்லி: ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக புகார் அளிக்க உள்ளேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 90 தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநிலத்துக்கு கடந்த 5-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில், யாருமே எதிர்பாராத முடிவு வெளியானது. ஆரம்பத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தாலும், சில மணி நேரத்தில் பாஜ முன்னிலை பெறத் தொடங்கியது. பிற்பகலிலேயே பெரும்பான்மைக்கு தேவையான 46 சீட்களில் பாஜ முன்னிலை பெற்றது.

இறுதியில் பாஜ 48 இடங்களில் வென்று தொடர்ந்து 3வது முறையாக ஹாட்ரிக் வெற்றியுடன் ஆட்சியை தக்க வைத்தது. இதனிடையே ஹரியானா வாக்கு எண்ணிக்கையில் பல தில்லுமுல்லு நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இந்நிலையில் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக புகார் அளிக்க உள்ளேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளிடியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணிக்கு வெற்றியளித்த அம்மக்களுக்கு நன்றி. ஜனநாயக சுயமரியாதைக்கும், அரசியல் சாசனத்திற்கும் கிடைத்த வெற்றி இது.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு முழு மனதுடன் நன்றி. ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. பல தொகுதிகளில் இருந்து வந்த புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளேன். ஆதரவு அளித்த ஹரியானா மக்களுக்கும், அயராது உழைத்த எங்கள் பாபர் ஷேர் தொழிலாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி. உரிமைகள், சமூக மற்றும் பொருளாதார நீதி மற்றும் உண்மைக்கான இந்த போராட்டத்தை நாங்கள் தொடர்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக புகார் அளிக்க உள்ளேன்: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Related Stories: