10 மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்… நவ.18ல் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முடிவு!!

சென்னை : நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். மசோதாக்கள் குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் அனுப்பி இருக்கிறார். அண்மையில், தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக கால தாமதம் செய்து வருகிறார் என்றும் இதனால் ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இவ்வழக்கில் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது மிகவும் கவலைக்குரியது என வேதனை தெரிவித்தது.

இந்த நிலையில், நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம், மீன்வள பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், தமிழ்நாடு அண்ணா தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா ஆகிய 10 மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் ஆளுநர் அனுப்பியுள்ள மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை உடனடியாக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்தது ஸ்டாலின் அரசு.நீட் விவகாரத்தில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட்டது போலவே தற்போது மீண்டும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்படுகிறது.

The post 10 மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்… நவ.18ல் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முடிவு!! appeared first on Dinakaran.

Related Stories: