ஆளுநரை கண்டித்து நாளை கருப்புக்கொடி: காங்கிரஸ் அறிவிப்பு

மஞ்சூர்: ஆளுநரை கண்டித்து ஊட்டியில் நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்து உள்ளது. நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதல்வர் உள்ளார். கடந்த 16ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் அனைத்து பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனை கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

இதற்கு போட்டியாக தமிழ்நாடு ஆளுநர் துணை வேந்தர்கள் மாநாட்டை அறிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கின்ற வகையில் சட்டத்தை மீறி ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் அறிவுறுத்தலுக்கு இணங்க நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் 25-ம் தேதி (நாளை) காலை 11.30 மணி அளவில் ஊட்டி காபி ஹவுஸ் முன்பாக கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

The post ஆளுநரை கண்டித்து நாளை கருப்புக்கொடி: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: