அதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அராசாணைபடி, தமிழ்நாட்டு போக்குவரத்துத் துறையின் மூலம், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் மூலம் இலவச போக்குவரத்து உதவியை, பெண்கள் தங்கள் பொருட்களை கொண்டு செல்வதற்கு உதவும், இது அவர்களின் சிறந்த வாழ்வாதாரத்தை ஈட்ட உதவும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே கீழ்க்கண்ட நிலையான இயக்க நடைமுறைகளை அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப்படுத்திட மேலாண் இயக்குனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு அடையாள அட்டை வைத்திருக்கும் மகளிர், அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 25 கிலோ வரையிலான சுமைகளை கட்டணமின்றி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அனைத்து நகரப் பேருந்துகளிலும், (ஏசி பேருந்துகள் நீங்களாக) சுய உதவிக்குழு பெண் பயணிகள் 25 கிலோ வரையிலான சுமைகளை மட்டும் சுமை கட்டணமின்றி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சாதாரண கட்டண புறநகர் பேருந்துகளிலும், சுய உதவிக்குழு பெண் பயணிகள் 25 கிலோ வரையிலான சுமைகளை மட்டும். 100 கி.மீ வரை சுமை கட்டணமின்றி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
சுய உதவிக்குழு பெண் பயணிகளுக்கு 25 கிலோ வரையிலான சுமைகளை கட்டணமில்லாமல் எடுத்து செல்ல “கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு” நடத்துனர் வழங்க வேண்டும்.
சுய உதவிக்குழு பெண் பயணிகள் எடுத்து செல்லும் சுமைகள் மற்ற சக பயணிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பேருந்து ஒட்டுநர் மற்றும் நடத்துனர்கள் சுய உதவிக்குழு பெண் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். சுய உதவிக்குழு பெண் பயணிகள் கொண்டுவரும் சுமைகளை பேருந்துகளில் ஏற்றி, இறக்குவதற்காக, போதுமான நேரத்தை வழங்கி பேருந்துகளை நிறுத்தி இயக்க வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது.
பேருந்தில் அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை அனுமதிக்கக் கூடாது. சகபயணிகளை பாதிக்கும் ஈரமான சுமைகளை அனுமதிக்கக் கூடாது. பயணிகள் இல்லாத சுமைகள் தனியாக பேருந்தில் அனுமதிக்கக் கூடாது. இந்த உத்தரவு குறித்து அனைத்து பேருந்து முனையங்களில் அறிவிப்பு பலகைகள் மூலம் பயணிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது விடியல் பயணத் திட்டத்திற்கான திருப்பிச் செலுத்துதல் வழங்குவது போல், சுய உதவிக்குழு பெண் பயணிகளின் சுமைகளின் நகர பேருந்துகளின் கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு -16 ரூபாய் மற்றும் புறநகர் கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு -45 ரூபாய் விதம் பயணசீட்டினை கணக்கிட்டு அதனை தணிக்கை செய்து ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிகுள் போக்குவரத்துத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
சுய உதவிக்குழு பெண் பயணிகளுக்கு 25 கிலோ வரையிலான சுமைகளை கட்டணமில்லாமல் எடுத்து செல்ல நிலையான இயக்க நடைமுறைகளின் விளக்கத்தினை ஓட்டுனர்கள், நடத்துநர்கள், பயணச்சீட்டுப் பரிசோதகர்கள், நேரக்காப்பாளர்கள், கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள், மற்றும் அனைவருக்கும் விளக்கிக் கூறி செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், சுய உதவிக்குழு பெண் பயணிகளின் சுமைகளுக்கு கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கடித்தத்தில் ப்பட்டுள்ளது. இது மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார வளர்ச்சிக்கும், பொருளாதார சுய சார்பிற்கும், தன்னம்பிக்கைக்கும் பெரிதும் துணையாக இருக்கும்.
The post அரசுப்பேருந்துகளில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 25 கிலோ வரை பொருட்களை இலவசமாக எடுத்து செல்ல அனுமதி: முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.