தீபாவளி பண்டிகையொட்டி தியாகராயர் நகரில் காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் காவல் ஆணையர்


சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி சென்னை தியாகராயர் நகரில் காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதை தியாகராயர் நகரில் காவல் ஆணையர் அருண் நேரில் ஆய்வு செய்தார். தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் வாங்க சென்னை மக்கள் அதிக அளவு ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனைகள் அதிகரித்துள்ளது அதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் கடைவீதிகளில் குவிந்து உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையை காவல் ஆணையர் அருண் திறந்து வைத்தார். ரங்கநாதன் தெரு அருகே 64 கேமராக்கள் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ட்ரோன் கேமரா மூலமும் மக்கள் கூட்டத்தை கண்காணிக்க காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தியாகராயர் நகரில் சுழற்சி முறையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தியாகராய நகர் வரும் குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை கொடுக்கவுள்ளோம். கூட்டங்களில் குழந்தைகள் தவறுதலாக காணாமல் போகும் சூழல் இருப்பதால் டேக்ஸ் சிஸ்டம் கொண்டுவரப்பட்டுள்ளது குழந்தைகள் தவறுதலாக வேறு இடத்திற்கு சென்றால் டேக் சிஸ்டத்தின் மூலம் குழந்தைகள் எங்கு உள்ளனர் என்பதை கண்டறிய முடியும்.

தீபாவளி பண்டிகையில் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு சென்னை மாநகர காவல் துறை சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ, மழைநீர் வடிகால் பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிகளில் பொதுமக்கள் வண்டிகளை பார்க்கிங் செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு பகுதிகளாக போக்குவரத்து காவலர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் வாகனங்களை சீர் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தீபாவளி பண்டிகைக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் தீபாவளியில் பணி மற்றும் படிப்பிற்காக சென்னையில் தங்கி உள்ளவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவார்கள். அதனால் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றது.

சென்னையைப் பொறுத்தவரை தற்போது அதிகளவு உட்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்ற வருவதினால் போக்குவரத்து ஆங்காங்கே பாதிப்படைகின்றது. அதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்தார் கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்

The post தீபாவளி பண்டிகையொட்டி தியாகராயர் நகரில் காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் காவல் ஆணையர் appeared first on Dinakaran.

Related Stories: