தொடர் விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

*படகு சவாரி செய்து மகிழ்ச்சி

ஏலகிரி : தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று வளர்ச்சியடைந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

இம்மலை ஏழைகளின் ஊட்டி எனவும், மலைகளின் இளவரசி எனவும் அழைக்கப்படுகிறது.பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது.

இதனால் அண்டை மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டு தலங்கள், பறவைகள் சரணாலயங்கள், மூலிகை பண்ணைகள், மங்கலம் சுவாமி மலை ஏற்றம், தாமரைக்குளம், கதவநாச்சியம்மன் கோயில், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உட்பட பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து பொழுதை போக்கி செல்கின்றனர்.

இந்நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்ததாலும், 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதாலும் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

படகு இல்லத்தில் குடும்பத்தோடும், நண்பர்களோடும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், இயற்கை பூங்காவில் மலர்கள், பூக்கள், ரசித்தும் புல் தரையின் மேல் அமர்ந்து பொழுதுபோக்கினர்.

The post தொடர் விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: