ஊட்டி: கோடை சீசனுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர்களில் இருந்து விதைகள் சேகரிக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை விடுமுறை மாதங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏராளமானோர் வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு அதிகளவு செல்கின்றனர். இதனால் ஏப்ரல் மற்றும் மே மாதம் முதல் சீசன் களைகட்டி காணப்படும். கோடை சீசனின்போது தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
மலர் கண்காட்சியின்போது பூங்கா முழுவதிலும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல் பல்லாயிரம் மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். இதனை பூங்காவிற்கு வரும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். முதல் சீசனக்காக டிசம்பர் மாதம் முதல் பூங்காவில் விதைப்பு மற்றும் நடவு பணிகள் மேற்கொள்ளப்படும். ஆறு மாதங்கள் கழித்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பூங்காவில் மலர்கள் பூத்துக் குலுங்கும். இதற்காக தற்போது ஊட்டி தாவரவியல் பூங்காவில் விதைகள் சேகரிப்பு பணி துவக்கப்பட்டுள்ளது.
பூங்கா ஊழியர்கள் ஊட்டியில் தாவரவியல் பூங்காவில் உள்ள பல்வேறு மலர் தாவரங்களிலிருந்து விதைகளை சேகரித்து வருகின்றனர். தொடர்ந்து ஒரு மாத காலம் இந்த விதை சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை பதப்படுத்திய பின்னர் டிசம்பர் மாதம் முதல் விதைப்பு பணிகளை துவக்க பூங்கா ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
The post ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக விதை சேகரிக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.