திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு முகாமில் சிறுதானிய உணவு திருவிழா

*கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு முகாமில், சிறுதானிய உணவு திருவிழாவை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ ராமபிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, ஆர்டிஓ மந்தாகின, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சரண்யா தேவி, மாவட்ட மறுவாழ்வு அலுவலர் செந்தில்குமாரி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், பட்டா மாற்றம், இலவச வீட்டு மனை பட்டா, கல்வி உதவித் தொகை, சுய தொழில் கடன் உதவி, முதியோர் உதவித் தொகை, பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 565 பேர் மனு அளித்தனர்.பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகள் அமரவைக்கப்பட்டிருந்த இடத்துக்கு நேரில் சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, கட்டணமின்றி மனுக்கள் எழுதித்தரும் உதவி மையத்தை கலெக்டர் பார்வையிட்டார். மேலும், குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு இலவசமாக பால் வழங்கும் மையத்தை கலெக்டர் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து, மகளிர் திட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறு தானிய உணவு திருவிழாவை கலெக்டர் தொடங்கி வைத்தார்.அதில், 18 ஒன்றியங்களில் இருந்தும் பங்கேற்ற மகளிர் சுய உதவி குழுவினர் சிறுதானிய உணவு வகைகளை சமைத்து மாவட்ட அளவிலான உணவுப் போட்டியில் கலந்து கொண்டனர்.

அதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும் சிறுதானிய உணவு திருவிழாவில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

The post திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு முகாமில் சிறுதானிய உணவு திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: