திருவாலங்காட்டில் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம், திருவாலங்காடு கிராமத்திலுள்ள தனியார் வெடி உற்பத்தி மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம், திருவாலங்காடு கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான வெடி உற்பத்தி மையத்தில் இன்று (24.08.2024) பிற்பகல் சுமார் 01.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் திருவாவடுதுறை கிராமம், மேலப் புதுத்தெருவைச் சேர்ந்த கர்ணன் (வயது 45) த/பெ.உத்திரம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த லட்சுமணன் (வயது 45) த/பெ.சுப்பிரமணியன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் கலியபெருமாள் மற்றும் குமார் ஆகிய இருவருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post திருவாலங்காட்டில் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: